சென்னை: மதுராந்தகம் அரசு மருத்துவமனையில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது பணிக்கு வராத 4 பெண் டாக்டர்கள் மீது துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை எடுக்கவும், அன்றாட பணிகளை கண்காணிக்காத இணை இயக்குநரை பணியிட மாற்றம் செய்ய உத்தரவிட்டார். மதுராந்தகத்தில் அரசு பொது மருத்துவமனையில் நேற்று காலை 11 மணியளவில் அமைச்சர் மா.சுப்பிரமணியன் திடீரென நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு நடத்தினார். இந்த ஆய்வின்போது அங்கு சிகிச்சை பெற்று வரும் நோயாளிகளை பார்வையிட்டு அவர்களுக்கு அளிக்கப்பட்டு வரும் சிகிச்சை முறைகளை கேட்டறிந்தார். மேலும், சித்தா பிரிவு, அறுவைச் சிகிச்சை அரங்கம், பிரசவத்திற்கு பிந்தைய வார்டு, ஆய்வகம் போன்ற அனைத்து பிரிவுகளிலும் ஆய்வு செய்தார். இதனை தொடந்து, மருத்துவமனையின் அனைத்து வார்டுகளையும் சுற்றி வந்து, அங்கு சுகாதார பணிகளை அமைச்சர் முடுக்கிவிட்டார். அங்கிருந்த குடிநீர், கழிவறை வசதிகளை மேம்படுத்தவும், உள்நோயாளிகளுக்கு தரமான உணவு வழங்க சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார். இதேபோல், அங்கு உள்நோயாளிகளாக சிகிச்சை பெற்று வருபவர்களிடம் மருத்துவமனையில் நிலவி வரும் குறைகளை கேட்டறிந்தார். பின்னர் அக்குறைகளை உடனடியாக நிவர்த்தி செய்ய மருத்துவமனை பொறுப்பு டீனுக்கு உத்தரவிட்டார். அங்குள்ள வருகை பதிவேட்டை ஆய்வு செய்து, சம்பந்தப்பட்ட ஊழியர்கள் பணியில் உள்ளனரா என்பதையும் கேட்டறிந்தார். இதில், டாக்டர்கள் மெர்லின், பிரபாவதி, கிருத்திகா, அர்ச்சனா பாலாஜி ஆகிய 4 பேரும் எந்தவித முன்அறிவிப்புமின்றி விடுப்பு எடுத்தது தெரிய வந்தது. இதனை தொடர்ந்து அந்த 4 மருத்துவர்கள் மீதும் துறை ரீதியிலான ஒழுங்கு நடவடிக்கை (17b) எடுக்குமாறு அங்கிருந்த அதிகாரியிடம் உத்தரவிட்டார். மேலும், இதை கண்காணிக்காத செங்கல்பட்டு இணை இயக்குநர் ரமாமணியை உடனடியாக வேறு மாவட்டத்திற்கு பணியிடமாறுதல் செய்யுமாறு, மருத்துவம் மற்றும் ஊரக நலப்பணிகள் இயக்குநருக்கு அதிரடியாக உத்தரவிட்டார்….