புழல்: செங்குன்றம் அடுத்த தீர்த்தங்கரையும் பட்டு பெரியார் தெருவைச் சேர்ந்தவர் விஜய்(22). இவர் சென்னை மதுரவாயல் வானகரம் பகுதியில் உள்ள தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். இந்நிலையில், கடந்த பிப்ரவரி மாதம் 29ம் தேதி இரவு வேலைக்கு சென்றுவிட்டு மோட்டார் சைக்கிளில் வீட்டிற்கு வந்து கொண்டிருந்தார்.
புழல் சைக்கிள் ஷாப் மதுரவாயில்-வண்டலூர் சாலை மேம்பாலத்தின் கீழே வந்தபோது இரண்டு மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர் விஜயை வழிமறித்து கத்தியை காட்டி மிரட்டி செல்போன், பணம், மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகியவற்றை பறித்துச் சென்றனர். இதுகுறித்து விஜய் புழல் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்கு பதிந்து அந்த பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்து வழிப்பறி கொள்ளையர்களை தேடிவந்தனர்.
இந்நிலையில், புழல் சைக்கிள் ஷாப் ஜிஎன்டி சாலையில் போலீசார் நேற்று வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அவ்வழியே மோட்டார் சைக்கிளில் வந்த 3 வாலிபர்களிடம் விசாரித்தனர். அதில், அம்பத்தூர் கள்ளிகுப்பம் முருகம்பேடு பகுதியைச் சேர்ந்த கணேஷ்குமார்(32), கடலூர் மாவட்டம் நெல்லிக்குப்பம் பகுதியைச் சேர்ந்த பரத்குமார்(22), தினேஷ்(32) ஆகியோர் என்பதும், வழிப்பறியில் ஈடுபட்டு வந்ததும் தெரியவந்தது. அதனைத்தொடர்ந்து, புழல் போலீசார் 3 பேரையும் கைது செய்து மாதவரம் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி புழல் சிறையில் அடைத்தனர். மேலும், அவர்களிடமிருந்து 3 இருசக்கர வாகனங்களை பறிமுதல் செய்தனர்.