மதுக்கரை, ஜன.8:மதுக்கரை நகராட்சியில் மக்களுடன் முதல்வர் முகாமில் பெறப்பட்ட மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. மதுக்கரை நகராட்சியில் உள்ள 27 வார்டு பொதுமக்களின் குறைகளுக்கு தீர்வு காணும் வகையில் 3 இடங்களில் மக்களுடன் முதல்வர் திட்ட சிறப்பு முகாம்கள் நடத்தி மனுக்கள் பெறப்பட்டது. இதில் குவாரி ஆபீஸ் பகுதியில் நடைபெற்ற முதல் முகாமில் 616 பேரும், மதுக்கரை மார்க்கெட் பகுதியில் நடைபெற்ற 2வது முகாமில் 842 பேரும், செட்டிபாளையம் பிரிவு பகுதியில் நடைபெற்ற 3வது முகாமில் 1440 பேரும் என மொத்தம் 2,898 பேர் மனுக்களை அளித்துள்ளனர்.
இந்த மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது தொடர்பான ஆலோசனை கூட்டம் மதுக்கரை நகராட்சி அலுவலகத்தில் நடைபெற்றது. நகராட்சி தலைவர் நூர்ஜகான் நாசர் தலைமையில், நகராட்சி ஆணையர் பிச்சைமணி முன்னிலையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் நகராட்சி அலுவலகத்தில் பணியாற்றும் அனைத்து துறைகளை சேர்ந்த ஊழியர்களும் கலந்து கொண்டனர்.அவர்களுக்கு மக்களுடன் முதல்வர் முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட நகராட்சி தொடர்பான மனுக்களுக்கு தீர்வு காண்பது எப்படி என்று நகராட்சி ஆணையர் பிச்சைமணி விளக்கி கூறி ஆலோசனை வழங்கினார்.