தண்டையார்பேட்டை: சென்னை தண்டையார்பேட்டை, எண்ணூர் நெடுஞ்சாலையில் டாஸ்மாக் மதுபான கடை இயங்கி வந்தது. இதனால் அவ்வழியே சென்று வருவதில் பெண்கள் உள்பட பலர் பெரிதும் அவதிப்பட்டனர். அந்த டாஸ்மாக் கடையை அகற்ற மக்கள் கோரிக்கை விடுத்தனர். இதைத் தொடர்ந்து, கடந்த சில மாதங்களுக்கு முன் அந்த டாஸ்மாக் கடை அகற்றப்பட்டது.இதன் தொடர்ச்சியாக, தற்போது அதே பகுதியில் சுந்தரம் பிள்ளை தெருவில் ஒரு தனியார் இடத்தில் மதுபான கடை அமைத்து திறக்கும் பணிகளில் டாஸ்மாக் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. இதற்கு அப்பகுதி மக்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர்.இந்நிலையில், இன்று காலை எண்ணூர் நெடுஞ்சாலையில் மக்கள் நடமாட்டம் மிகுந்த சுந்தரம் பிள்ளை தெருவில் டாஸ்மாக் மதுபான கடை அமைப்பதை நிறுத்த வேண்டும்.தமிழக முதல்வரின் உத்தரவை அதிகாரிகள் கடைப்பிடிக்க வேண்டும். இல்லையேல் நாங்கள் பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபடுவோம் என்பதை வலியுறுத்தி குடியிருப்போர் முன்னேற்ற சங்கம் சார்பில் கண்டன போஸ்டர்கள் ஒட்டப்பட்டு உள்ளன. இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது….