மணப்பாறை, ஏப். 20: திருச்சி மாவட்டம் மணப்பாறை அருகே நூறு சதவீதம் வாக்களிப்பதை ஊக்குவிக்கும் வகையில் வாக்களித்துவிட்டு வீடு திரும்பிய பெற்றோர்களுக்கு மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர். மணப்பாறை அடுத்த சமுத்திரம் அரசு உயர்நிலைப் பள்ளியில் பயிலும் மாணவ, மாணவியர்கள், தலைமையாசிரியர் ராஜசேகரன் முன்னெடுப்பில் தங்களது பெற்றோர்களுக்கு நூறு சதவீதம் வாக்களிப்பதை உறுதி செய்ய வேண்டி கடந்த 5ம் தேதி கடிதம் எழுதியிருந்தனர்.
அதில் தங்களது பெற்றோர்கள் வாக்கு செலுத்திவிட்டு வீடு திரும்பும்போது அவர்களை வரவேற்க காத்திருப்பதாகவும் குறிப்பிட்டிருந்தனர். அதன்படி நேற்று நடைபெற்ற வாக்கு பதிவில் வாக்கு செலுத்திவிட்டு வீடு திருப்பிய தங்களது பெற்றோர்களை மலர் தூவி ஆரத்தி எடுத்து வரவேற்றனர்.