உடுமலை, ஆக. 2: மடத்துக்குளம் ஜேஎஸ்ஆர் மேல்நிலைப் பள்ளியில் நடைபெற்ற உணவு திருவிழாவில் நெருப்பில்லாத சமையல் முறையில் 200-க்கும் மேற்பட்ட உணவு வகைகளை மாணவ, மாணவிகள் காட்சிப்படுத்தினர். இங்கு பாரம்பரிய உணவு வகைகள் குறித்தும், நெருப்பில்லாத சமையல் குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உணவு திருவிழா நடைபெற்றது.
பள்ளியில் பயிலும் 6-ம் வகுப்பு முதல் பிளஸ் 2 வரையிலான மாணவ, மாணவிகள் 120 பேர் பங்கேற்றனர். நெருப்பு உபயோகம் இன்றி மாணவர்கள் அவர்களாகவே தயாரித்த கரும்பு சர்க்கரை சேர்க்கப்பட்ட பாசிப்பயறு அல்வா, மாம்பழ லசி, நவ தானிய லட்டு, ராகி, கொள்ளு, கம்பு உள்ளிட்ட நம் முன்னோர்கள் பயன்படுத்திய உணவு பண்டங்களை நினைவூட்டும் வகையிலான உணவுகளை காட்சிப்படுத்தினர்.
உணவு திருவிழாவை ஜேஎஸ்ஆர் பள்ளியின் தாளாளர் ச.ராஜ்குமார் தொடங்கி வைத்தார். பள்ளியின் முதல்வர்கள் சி.லீனா, ச.சைலஜா ஆகியோர் முன்னிலை வகித்தனர். உணவு வகைகளை மாணவ, மாணவிகள் அனைவரும் கண்டு மகிழ்ந்தனர். பார்வையாளர்கள் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. உணவு திருவிழாவில் பங்கேற்றவர்களுக்கும், தேர்ந்தெடுக்கப்பட்டவர்களுக்கும் சிறப்பு பரிசுகள் வழங்கப்பட்டன.