பரமக்குடி, மே 24: பரமக்குடி அருகே மஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி மையத்தின் கட்டிடப் பணிகளை கலெக்டர் ஆய்வு செய்தார். ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி அருகே மஞ்சூர் அரசு ஆசிரியர் பயிற்சி மையம் சேதமடைந்ததால் புதிய கட்டிடம் கட்ட வேண்டும் என ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் சார்பாக கோரிக்கை வைக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து தமிழக அரசின் சார்பாக ரூ.4.55 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு புதிய கட்டிடம் கட்டும் பணி தொடங்கியது.
இதனை நேற்று ராமநாதபுரம் கலெக்டர் விஷ்ணு சந்திரன் ஆய்வு செய்தார். இதனைத் தொடர்ந்து, ஆசிரியர் பயிற்சி மையத்தின் அனைத்து உட்கட்டமைப்பு வசதிகளையும் மேம்படுத்திட வேண்டுமென பொது பணித்துறை அலுவலர்களுக்கு அறிவுறுத்தினார். இந்த ஆய்வில் பொதுப்பணித்துறை செயற்பொறியாளர் குருதிவேல் மாறன், உதவி பொறியாளர் மெளனிகா மற்றும் அரசு ஆசிரியர் பயிற்சி மைய ஆசிரியர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.