மண்டபம், மே 24: மண்டபம் ஒன்றிய பகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் மதுரை வேளாண்மை கல்லூரி சார்பில் தென்னை மரங்களில் ஏற்படும் வாடல் நோய் கட்டுப்படுத்துவது குறித்தும், இயற்கை விவசாயத்தால் ஏற்படும் சுற்றுச்சூழல் நன்மை குறித்து விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது. மண்டபம் ஒன்றியத்தில் நாகாச்சி, பெரியபட்டினம், பிரப்பன் வலசை, இரட்டை ஊரணி உள்பட 28 ஊராட்சி பகுதிகளில் பெரும்பான்மையான மக்கள் தென்னை உள்ளிட்ட விவசாயம் செய்து வருகின்றனர்.
இந்த விவசாயிகளுக்கு மதுரை வேளாண்மை கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையம் சார்பில் இயற்கை விவசாயம் செய்வது குறித்து விழிப்புணர்வு முகாம் கடந்த ஒரு வார காலமாக நடைபெற்று வருகிறது. இந்த முகாமில் மண்டபம் ஒன்றிய பகுதியில் 16 மாணவிகள் 8 குழுவாக பிரிந்து விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக இரட்டையூரணி கிராமத்தில் கல்லூரி மாணவி திவ்யதர்ஷினி கிராமப்புற வேளாண்மை பணி அனுபவ திட்டத்தின் கீழ் இயற்கை விவசாயம் செய்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்தும்,
இயற்கை விவசாயத்தால் சூற்றுச்சூழலுக்கு ஏற்படும் நன்மைகள் குறித்தும், போர்டியாக்ஸ் கலவை செய்முறை குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்தினார். தொடர்ந்து இந்த போர்டியாக்ஸ் கலவை காப்பர் சல்பேட் மற்றும் சுண்ணாம்பு கொண்டு தயாரிக்கப்படுகிறது. இந்த கலவையை தென்னைக்கு தெளிப்பதன் மூலம் தஞ்சை தென்னை வாடல் நோயை கட்டுப்படுத்த முடியும் என செயல்முறை விளக்கம் அளித்தார்.