ஊட்டி : நீலகிரி மாவட்டம் முதுமலை புலிகள் காப்பக வனப்பகுதிகளில் புலி, யானை, சிறுத்தை, காட்டுமாடு உள்ளிட்ட பல்வேறு வகையான வனவிலங்குகள் உள்ளன. தெப்பகாட்டில் இருந்து மசினகுடி, கல்லட்டி வழியாக ஊட்டிக்கு சாலை உள்ளது. இச்சாலை முதுமலை புலிகள் காப்பக வனத்தின் நடுவே செல்கிறது. அபாயகர சாலை என்பதால் ஊட்டியில் இருந்து கீழ் நோக்கி செல்ல சுற்றுலா பயணிகள் வாகனங்களுக்கு அனுமதி இல்லை. மசினகுடியில் இருந்து ஊட்டி நோக்கி வர சுற்றுலா பயணிகள் வாகனங்கள் அனுமதிக்கப்படுகின்றன. இந்நிலையில் நேற்று முன்தினம் மாலை கேரளா மாநிலம் மலப்புரத்தை சேர்ந்த சுற்றுலா பயணிகள் 7 பேர் கார் மூலம் ஊட்டியை சுற்றி பார்ப்பதற்காக மசினகுடி வழியாக வந்துள்ளனர். மசினகுடியில் இருந்து மாவனல்லா நோக்கி வந்த போது சாலைேயார புதரில் இருந்து ஆக்ரோஷமாக காரை நோக்கி வந்த ஒற்றை காட்டு யானை, காரின் முன்பக்கம், இடதுபுற கதவு, கண்ணாடி உள்ளிட்டவற்றை தந்தத்தால் குத்தி கிழித்தது. இதில் கார் கடுமையாக சேதமடைந்தது. காட்டு யானையின் திடீர் தாக்குதலால் காரில் இருந்தவர்கள் அலறியுள்ளனர். காரை சேதப்படுத்திய யானை வனத்திற்குள் சென்றது. தொடர்ந்து அந்த வழியாக வந்த பிற வாகன ஓட்டிகள் வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்தனர். இத்தகவலின் பேரில் வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்….