மங்களூரு: கர்நாடகாவில் ரசாயன வாயு கசிந்த விபத்தில் 20 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்த விபத்து கர்நாடக மாநிலம் மங்களூரு பகுதியில் நடந்துள்ளது. மங்களூருவில் உள்ள பனம்பூர் போலீஸ் எல்லைக்குட்பட்ட பகுதியில் தனியாருக்கு சொந்தமான மீன் பதப்படுத்தும் தொழிற்சாலை உள்ளது. இந்த இடத்தில் இன்று காலை 11 மணியளவில் இந்த விபத்து நடந்துள்ளது. வழக்கமாக இங்கு பணிபுரியும் தொழிலாளர்கள் 80 பேர் இன்று பணியாற்றிக்கொண்டிருந்த போது திடீரென ரசாயன வாயு கசிந்தது. இந்த விபத்தில் 20 மூச்சுத்திணறல் ஏற்பட்டு அங்கேயே மயங்கி விழுந்தனர். உடனடியாக அங்கிருந்தவர்கள் இந்த விபத்து தொடர்பாக தீயணைப்பு துறையினருக்கும் காவல் துறையினருக்கும் தகவல் தெரிவிக்க விரைந்து வந்த தீயணைப்புத்துறையினர் அங்கிருந்த 20 பேரையும் மீட்டு அருகில் உள்ள தனியார் மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதித்தனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.இதனிடையே இந்த விபத்து ஏற்பட்டதற்கான காரணம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த தொழிற்சாலையில் அனைத்து ஆவணங்களும் முறையாக கடைபிடிக்கப்பட்டு ரசாயன குழாய்கள் அனைத்தும் முறையாக பராமரிக்கப்பட்டு வந்ததா? என்ற கேள்வி எழுந்துள்ளது. இரண்டு வருடத்திற்கு ஒருமுறை அனைத்து பராமரிப்பு பணிகளையும் மேற்கொள்ள வேண்டும். இந்த கொரோனா காலக்கட்டத்தில் பராமரிப்பு பணிகள் சரிவர மேற்கொள்ளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. இதுசம்மந்தமாக தற்போது மங்களூருவில் உள்ள பனம்பூர் போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளார். விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருகிறது. மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள 20 பேரில் 2 பேரின் உடல்நிலை மிகவும் கவலைக்கிடமாக உள்ளது. அவர்களுக்கு தீவிர சிகிச்சை பிரிவில் தொடர்ந்து சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது….