தேவாரம், டிச. 13: தேனி மாவட்டம், பண்ணைப்புரம், வடக்கு தெருவை சேர்ந்தவர் ராமு (65). இவர் கேரளாவை சேர்ந்த ரவீந்திரநாத் என்பவரது தோட்டத்தில் இரவுக்காவலாளியாக வேலை பார்த்து வருகிறார். கடந்த 2 நாட்களுக்கு முன் நள்ளிரவு அவர், தோட்டத்திற்கு செல்வதற்காக, பண்ணைப்புரம் சங்கப்பன்குளம் பகுதியில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது அந்த பகுதியில் இருந்த மக்னா எனும் ஒற்றையானை அவரை தாக்கி பக்கத்தில் இருந்த முள்வேலியில் வீசியது. இதில், ராமு படுகாயம் அடைந்தார். ராமு முள்வேலிக்குள் விழுந்து கிடந்ததால், யானை மேற்கொண்டு தாக்குதல் நடத்தாமல் அப்படியே விட்டுவிட்டு சென்று விட்டது.
அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிய ராமுவை அக்கம்பக்கத்தினர் மீட்டு உத்தமபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.நேற்று தேனி தெற்கு மாவட்ட திமுக செயலாளரும், கம்பம் சட்டமன்ற உறுப்பினருமான ராமகிருஷ்ணன், அவரை மருத்துவமனையில் சந்திந்து நலம் விசாரித்து ஆறுதல் கூறி மேல் சிகிச்சைக்காக மருத்துவர்களிடம் பரிந்துரைத்தார். நிகழ்வில், உத்தமபாளையம் மேற்கு ஒன்றிய செயலாளர் குமரன், உத்தமபாளையம் கிழக்கு ஒன்றிய செயலாளர் முருகேசன், அனுமந்தன்பட்டி பேரூர் செயலாளர் ராஜ்குமார், மற்றும் தி.மு.கழக நிர்வாகிகள் உடன் இருந்தனர்.