கறம்பக்குடி: புதுக்கோட்டை மாவட்டம் கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் கலைஞரின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு அரசு பள்ளி கல்வித்துறை சார்பாக நேற்று காலை தமிழ் கூடல் விழா நடைபெற்றது. தமிழ்த்தாய் வாழ்த்துடன் விழா துவங்கியது.தலைமை ஆசிரியர் முனைவர் துரைகுமரன் தலைமை வகித்து பேசுகையில், தமிழர்களின் பண்பாடு, பாரம்பரியம், கலை மரபு ஆகியவற்றைப் பற்றி இளைய தலைமுறையினர் தெரிந்து கொள்வதன் அவசியம் குறித்தும் அவற்றைப் போற்றி பாதுகாக்க வேண்டியது அவசியத்தையும் எடுத்து கூறினார். சிறப்பு அழைப்பாளராக கறம்பக்குடி அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி தமிழ் ஆசிரியர் செல்வக்குமார் பங்கேற்று மாணவர்களுக்கு தமிழின் பெருமை பற்றியும் தொன்மை பற்றியும் இலக்கிய கதைகளை சுட்டிக்காட்டி சிறப்புரை ஆற்றினார். தமிழ் கூடல் சிறப்பு விழாவில் மாணவர்களுக்கு பேச்சுப்போட்டி கட்டுரை போட்டி ஓவியப்போட்டி மாறுவேட போட்டி போன்ற பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டு அவற்றில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசுகளும் வழங்கி பாராட்டப்பட்டனர்.தமிழாசிரியர் நவநீதக்கண்ணன் தொகுத்து வழங்கினார். விழாவில் பள்ளி வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது. விழாவில் பள்ளி ஆசிரியர், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள், அலுவலர்கள் உள்ளிட்ட ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.விழாவில் அனைவருக்கும் இனிப்புகள் வழங்கப்பட்டன. முன்னதாக பள்ளி தமிழாசிரியை முத்துலட்சுமி வரவேற்றார். முடிவில் பள்ளி உதவி தலைமை ஆசிரியர் முத்துக்குமார் நன்றி கூறினார்.
மக்கள் மகிழ்ச்சி கறம்பக்குடி அருகே அம்புக்கோவில் அரசு உயர்நிலைப்பள்ளியில் தமிழ் கூடல் சிறப்பு விழா
previous post