ராமநாதபுரம், ஜூன் 11: ராமநாதபுரம் மாவட்டத்தில் நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் 35 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது. ராமநாதபுரம் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் ராமநாதபுரம், பரமக்குடி, ராமேஸ்வரம், கமுதி, முதுகுளத்தூர், திருவாடானை ஆகிய நீதிமன்றங்களில் மக்கள் நீதிமன்றம் நடைபெற்றது. ராமநாதபுரத்தில் நடந்த மக்கள் நீதிமன்றத்திற்கு மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு தலைவரும், முதன்மை மாவட்ட நீதிபதியுமான விஜயா தலைமை வகித்தார்.
இதில் 337 வழக்குகள் எடுத்துக் கொள்ளப்பட்டது, 35 வழக்குகளுக்கு சமரச தீர்வு காணப்பட்டு, ரூ.2.78 கோடி தீர்வு தொகையாக அறிவிக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் நிரந்தர மக்கள் மன்ற மாவட்ட நீதிபதி பரணிதரன், மாவட்ட மகளிர் நீதிமன்ற நீதிபதி கோபிநாத், தலைமை குற்றவியல் நீதித்துறை நடுவர் கவிதா, சார்பு நீதிபதி கதிரவன், மாவட்ட உரிமையியல் நீதிபதி நிலவேஸ்வரன், நீதித்துறை நடுவர்கள் பிரபாகரன், வெர்ஜின் வெஸ்டா, வழக்கறிஞர் சங்க பொருளாளர் பாபு, இணை செயலாளர் கிருஷ்ணமூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.