காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட குறைதீர் கூட்டத்தில் கலெக்டர் ஆர்த்தி, பெண்களுக்கு இலவச தையல் மெஷின்களை வழங்கினார். காஞ்சிபுரம் கலெக்டர் அலுவலகத்தில் மக்கள் குறைதீர் நாள் கூட்டம் கலெக்டர் ஆர்த்தி தலைமையில் நேற்று நடந்தது. இதில் பல்வேறு கோரிக்கைகள் அடங்கிய மனுக்களை பொதுமக்களிடம் இருந்து கலெக்டர் பெற்றார். பின்னர் அந்த மனுக்கள் சம்பந்தப்பட்ட துறைக்கு அனுப்பப்பட்டன. தொடர்ந்து, சத்துணவு பணியாளர்களுக்கு மாவட்ட அளவில் சமையல் போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்றவர்களுக்கு முதல் பரிசாக ₹2500, 2வது பரிசு ₹1500. 3வது பரிசு ₹1000 மற்றும் பாராட்டு சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. மேலும், சத்தியவாணி முத்து அம்மையார் நினைவு இலவச தையல் மெஷின் 10 பேருக்கு, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை சார்பில் ₹6500 மதிப்புள்ள மோட்டார் பொருத்தப்பட்ட தையல் இயந்திரம் ஒருவருக்கு, பார்வைத் திறன் குறைபாடுள்ள மாற்றுத்திறனாளிகள் பணிக்கு சென்று வர இலவச பஸ் பாஸ், காஞ்சிபுரம் வட்டம் சின்னையங்குளம் கிராமத்தில் 16 பேருக்கு இலவச வீட்டு மனை பட்டா, 4 பழங்குடியின மக்களுக்கு குடும்ப அட்டைகள் ஆகியவை கலெக்டர் ஆர்த்தி வழங்கினார்.நிகழ்ச்சியில் மாவட்ட வருவாய் அலுவலர் சிவ ருத்ரய்யா, கலெக்டரின் நேர்முக உதவியாளர் (சத்துணவு) மணிமாறன், மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நல அலுவலர் பிரகாஷ்வேல், மாவட்ட பிற்படுத்தப்பட்டோர் நல அலுவலர். ரவிச்சந்திரன், மாவட்ட சமூக நல அலுவலர். ரேவதி, மாற்றுத்திறனாளிகள் நலத்துறை அலுவலர் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர். …