தர்மபுரி, மே 11: தர்மபுரி மாவட்ட காவல்துறை சார்பில், மக்கள் குறைதீர்க்கும் முகாம் நேற்று எஸ்பி அலுவலக வளாகத்தில் நடந்தது. மாவட்ட எஸ்பி ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமை வகித்தார். ஏடிஎஸ்பி இளங்கோ முன்னிலை வகித்தார். பிரமாண்ட பந்தல் மற்றும் இருக்கைகள் அமைத்து 31 காவல்நிலையம் சார்பில், தனித்தனியாக புகார் மனுதார்களை நேரில் வரவழைத்து குறைகள் கேட்டு, மனுக்கள் மீது உடனே விசாரித்து தீர்வு காணப்பட்டது. இம்முகாமில், மொத்தம் 149 புகார் மனுக்கள் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது. இதில் 118மனுக்கள் மீது உடனே தீர்வு காணப்பட்டது. உங்கள் தொகுதியில் முதல்வர் பகுதிக்கு வந்த புகார் மனுக்கள், நிலப்பிரச்னை, வழித்தட பிரச்னை, பணம் கொடுத்தல், வாங்கல் பிரச்னை, குடும்ப பிரச்னை, போலி ஆவணம் தயாரித்தல், மிரட்டல் உள்ளிட்ட பலவகையான மனுக்கள் மீது விசாரித்து தீர்வு காணப்பட்டது. இதுகுறித்து அதிகாரிகள் கூறுகையில், 149 மனுக்களில் 118 மனுக்கள் தீர்வு காணப்பட்டது. 31 மனுக்கள் விசாரணையில் உள்ளது. தர்மபுரி மாவட்டத்தில் புகார் மனுக்கள் நிலுவை இல்லாத வகையில், மனுக்கள் உடனுக்குடன் விசாரித்து நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்றார்.
மக்கள் குறைதீர்க்கும் முகாம்
previous post