திருப்பூர், ஜன. 6: மக்களுடன் முதல்வர் திட்ட முகாமில் பொதுமக்களிடம் இருந்து பெறப்பட்ட கோரிக்கை மனுக்களுக்கு ஒப்புகை சீட்டுகளை செல்வராஜ் எம்.எல்.ஏ. வழங்கினார். தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கோவையில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாமினை தொடங்கி வைத்தார். இதனைத்தொடர்ந்து திருப்பூர் மாவட்டத்தில் இந்த முகாம் நடந்து வருகிறது. பொதுமக்களும் தங்களது கோரிக்கைகளை ஒரே இடத்தில் மனுவாக கொடுத்து வருகிறார்கள். இந்த மனுக்கள் மீதும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படுகிறது.
இந்நிலையில் 3-வது மண்டலத்திற்கு உட்பட்ட வார்டு எண் 56-க்கு உட்பட்ட வித்யா கார்த்திக் மண்டபத்தில் மக்களுடன் முதல்வர் திட்ட முகாம் நடந்தது. இதில் செல்வராஜ் எம்.எல்.ஏ. கலந்துகொண்டு பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களுக்கான ஒப்புகை சீட்டுகளை வழங்கினார். இந்த நிகழ்ச்சியில் தெற்கு மாநகர செயலாளர் டி.கே.டி.மு.நாகராசன், பகுதி செயலாளர்கள் மு.க.உசேன், மியாமி அய்யப்பன், கவுன்சிலர் ராதாகிருஷ்ணன், மகளிர் தொண்டரணி அமைப்பாளர் ஆனந்தி, மாநகர துணைச்செயலாளர் மகாலட்சுமி, வார்டு செயலாளர் நந்தகோபால், ஆனந்த், பகுதி அவைத்தலைவர் தம்பிகுமாரசாமி மற்றும் நிர்வாகிகள் பலர் கலந்துகொண்டனர்.