ரேபரேலி: ‘‘சாமானிய மக்களுக்கு சேவை செய்வதன் ராஜ தர்மத்தை மறந்துவிட்டு, பெரிய தொழிலதிர்களுக்காக மட்டும ஒன்றிய பாஜ அரசு செயல்படுகிறது’’ என காங்கிரஸ் பொதுச் செயலாளர் பிரியங்கா காந்தி குற்றம்சாட்டினார். உபி மாநிலம் ரேபரேலி ஜகத்பூர் பகுதியில் நடைபெற்ற பேரணியில் அவர் பேசியதாவது: மதம் மற்றும் சாதியை பயன்படுத்தி ஓட்டுக்களைப் பெறுபவர்களை மக்கள் கண்காணிக்க வேண்டும். பாஜ தலைவர்கள் மக்களுக்கு சேவை செய்யும் தங்கள் கடமையை மறந்துவிட்டனர். ஓட்டுக்காக மக்களை அவர்கள் தூண்டி விடுகின்றனர். மக்களுக்கு சேவை செய்யும் ராஜ தர்மத்தை பாஜ அரசு பின்பற்றுவதில்லை. அவர்களுக்கு தேவை பெரிய தொழிலதிபர்கள்மட்டும்தான். அவர்களுக்காகத்தான் அரசு இயந்திரம் இயங்கிக் கொண்டிருக்கிறது. இன்று காஸ் சிலிண்டர், கடுகு எண்ணெய் விலை வரலாறு காணாத உச்சத்தை தொட்டுள்ளது. தினசரி சம்பளம் ரூ.200 கிடைக்கிறது, ஆனால் கடுகு எண்ணெய் விலையோ ரூ.240 ஆக இருக்கிறது. கரும்பு விவசாயிகளின் மொத்த நிலுவைத் தொகை ரூ. 14,000 கோடி. ஆனால் பிரதமர் மோடி ரூ.16,000 கோடி மதிப்பிலான 2 விமானங்களை தனக்காக வாங்கியுள்ளார். அதில் அவர் உலகம் சுற்றுவார். ஆனால் விவசாயிகளின் நிலுவைத் தொகையை செலுத்த மாட்டார். கடந்த சில ஆண்டுகளாக பாகிஸ்தான் உட்பட பல நாடுகளுக்கு பிரதமர் சென்றுள்ளார், ஆனால் போராட்டம் நடத்தும் விவசாயிகளை சந்திக்க செல்லவில்லை. தேர்தலுக்கு முன்பு அவர் விவசாய சட்டங்களுக்காக மன்னிப்பு கேட்கிறார். மூன்று ஆண்டாக வீட்டை விட்டு வெளியேற வராத சமாஜ்வாடி தலைவர் அகிலேஷ், பகுஜன் சமாஜ் தலைவர் மாயாவதி ஆகியோர் தேர்தலுக்காக இப்போது பொது இடங்களுக்கு வந்து ஓட்டு கேட்கிறார்கள். இவ்வாறு அவர் பேசினார்….