காரைக்கால், ஏப்.6: வாக்குப்பதிவு நடைபெறும் தினத்தன்று அனைத்து அரசு அலுவலகங்கள், தனியார் நிறுவன ஊழியர்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்க வேண்டும் என அரசு உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து புதுச்சேரிஉள்துறை சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது: புதுச்சேரி துணை நிலை ஆளுநர் ஆணைப்படி, நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குபதிவு நடைபெறவுள்ள ஏப்ரல் 19ம் தேதி சம்ப ளத்துடன் கூடிய பொது விடுமுறையாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி அனைத்து அரசு அலுவலகங்கள், நிறுவனங்கள், உள்ளாட்சி அமைப்புகள், வணிக மற்றும் தொழில் துறை நிறுவனங்களுக்கு சம்பளத்துடன் கூடிய விடுமுறை அளிக்கப்ப டுகிறது. அதேபோன்று புதுச்சேரி யூனியன் பிரதேசத்தில் செயல்படும் தனியார் நிறுவனங்கள் 2024ம் ஆண்டு நாடாளுமன்ற தேர்தலையொட்டி, அங்கு பணிபுரியும் வாக்காளர்கள் தங்கள் வாக்கினை பதிவு செய்யும் வகையில்,
மக்கள் பிரதிநிதித்துவசட்டம் 1951ன் கீழ் பிரிவு 135 Bன் கீழ் ஊதியத்துடன் கூடிய விடுமுறையினை அளிக்க வேண்டும். அதேபோல் நிர்வாகத்தில் பல்வேறு துறைகளில் தினசரி ஊதியத்தில் பணிபுரியும் தொழிலாளர்களுக்கும் இந்த உத்தரவு பொருந்தும். இவ்வாறு புதுச்சேரிஉள்துறை சார்பு செயலர் ஹிரன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.