விழுப்புரம், ஏப். 17: மக்களவை பொதுத் தேர்தலில் பொதுமக்கள் சொந்த ஊருக்கு சென்று வாக்களிக்க ஏதுவாக 940 சிறப்பு பேருந்துகள் இயக்கப்படும் என்று விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் தெரிவித்துள்ளது. இதுகுறித்து விழுப்புரம் கோட்ட அரசு போக்குவரத்து கழகம் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் கூறியிருப்பதாவது, மக்களவைத் தேர்தலையொட்டி இன்று (17ம் தேதி), நாளை (18ம் தேதி) பொதுமக்கள் கிளாம்பாக்கம், மாதவரம் மற்றும் கோயம்பேடு பேருந்து நிலையத்திலிருந்து விழுப்புரம், கள்ளக்குறிச்சி, திண்டிவனம், செஞ்சி, கடலூர், சிதம்பரம், நெய்வேலி, பண்ருட்டி, வடலூர், காட்டுமன்னார்கோவில், விருத்தாசலம், திட்டக்குடி, திருவண்ணாமலை, போளூர், வந்தவாசி, வேலூர், திருப்பத்தூர், தர்மபுரி, ஓசூர், ஆரணி, செய்யார் மற்றும் காஞ்சிபுரம் ஆகிய ஊர்களுக்கு அதிக அளவில் பயணம் செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
அதனால் விழுப்புரம் அரசு போக்குவரத்துக் கழகம் சார்பாக கூடுதலாக இன்று (17ம் தேதி) 450 பேருந்துகளும், நாளை (18ம் தேதி) 490 பேருந்துகள் என மொத்தம் 940 சிறப்பு பேருந்துகளை இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. எனவே, பயணிகள் https://www.tnstc.in என்ற இணையதளம் மூலம் முன்பதிவு செய்து இச்சிறப்பு பேருந்துகளை பயன்படுத்திக் கொள்ளலாம். அதேபோல் வார இறுதி விடுமுறையை முடித்து பொதுமக்கள் பல்வேறு இடங்களிலிருந்து மீண்டும் சென்னை செல்வதற்கு 21ம் தேதி 500 சிறப்பு பேருந்துகள் கூடுதலாக இயக்கப்பட உள்ளது. மேலும், பயணிகள் கூட்டம் குறையும் வரை தேவைக்கு ஏற்ப பேருந்துகளை ஏற்பாடு செய்திடவும், பேருந்து இயக்கத்தினை மேற்பார்வை செய்திடவும் அதிகாரிகள் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.