கள்ளக்குறிச்சி: கள்ளக்குறிச்சி மாவட்டம் சின்னசேலம் அருகே உள்ள கிராமத்தை சேர்ந்தவர் குமரேசன் (35), லாரி டிரைவர். இவரது காதல் மனைவி சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வருகிறார். அதே பள்ளியில் இத்தம்பதியின் மகள் 4ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த மாதம் 1ம்தேதி வீட்டில் சிறுமி சோகமாக இருந்துள்ளார். இதுகுறித்து அவரது தாய் விசாரித்தபோது தந்தை குமரேசன் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தெரியவந்தது. இது குறித்து சிறுமியின் தாய் கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போலீசார் குமரேசன் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்கு பதிந்து அவரை கைது செய்து கடலூர் சிறையில் அடைத்தனர். இந்நிலையில், குமரேசனை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை எடுக்க கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பகலவன், ஆட்சியர் ஷ்ரவன்குமாரிடம் பரிந்துரை செய்தார். இதனையேற்று குண்டர் சட்டத்தின் கீழ் குமரேசனை சிறையில் அடைக்க ஆட்சியர் நேற்று உத்தரவிட்டார். அதன்படி குமரேசன் மீது குண்டர் சட்டம் பாய்ந்தது. …