சென்னை: ஓ.பன்னீர்செல்வத்திற்கு வழங்கப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பை மறு ஆய்வு செய்யக் கோரி எடப்பாடி ஆதரவாளர் ராஜாராம் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. கடந்த ஜூலை 11ம் தேதி அதிமுக தலைமை அலுவலகத்துக்கு சென்ற பன்னீர்செல்வம், தனது பாதுகாப்புக்கு வழங்கப்பட்ட போலீஸ் உதவியுடன், ஆயுதங்களுடன் சென்று தாக்குதல் நடத்தியதால், போலீஸ் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க உள்துறை செயலாளர், டிஜிபிக்கு உத்தரவிடக் கோரி அதிமுக இடைக்கால பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் ஆதரவாளரும், மாவட்ட செயலாளருமான ஆதிராஜாராம், சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். அந்த மனுவில், முன்னாள் முதல்வர் என்ற அடிப்படையில் பன்னீர்செல்வத்துக்கு வழங்கியுள்ள போலீஸ் பாதுகாப்பை அவர் தவறாக பயன்படுத்தியுள்ளார். தனி பாதுகாப்பு போலீசாரின் உதவியுடனேயே அதிமுக அலுவலகத்தில் ஆவணங்களை கொள்ளையடித்து சென்றார். முன்னாள் முதல்வரான பன்னீர்செல்வம், தற்போது அரசிலும், கட்சியிலும் எந்த பொறுப்பிலும் இல்லை. அவருக்கு எந்த அச்சுறுத்தலும் இல்லாத நிலையில், அவருக்கு வழங்கப்பட்டுள்ள பாதுகாப்பை மறு ஆய்வு செய்ய வேண்டும். பன்னீர்செல்வத்துக்கு ஆதரவாக செயல்பட்ட போலீசார் மீதும் பாதுகாப்பை தவறாக பயன்படுத்திய பன்னீர்செல்வத்துக்கு எதிராக நடவடிக்கை எடுக்க கோரி உள்துறை செயலாளர், டிஜிபிக்கு மனு அளித்தும் நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் குறிப்பிட்டிருந்தார். மனுவை விசாரித்த நீதிபதி இளந்திரையன், ஆதாரமற்ற குற்றச்சாட்டுடன் ஆதிராஜாராமால் வழக்கு தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக கூறி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டுள்ளார்….