ஆலந்தூர்: போலீசார் விசாரணைக்கு பயந்து கழுத்து, கைகளை பிளேடால் அறுத்துக்கொண்டு மருத்துவமனையில் சிகிச்சைபெற்று வந்த வாலிபர் எஸ்கேப் ஆனது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ஆதம்பாக்கத்தில் நடந்த சம்பவம் பற்றிய விவரும் வருமாறு; சென்னை ஆதம்பாக்கம் அம்பேத்கர் நகரை சேர்ந்தவர் லோகேஷ் (23). இவர் அடிதடி வழக்கு சம்பந்தமாக அடிக்கடி சிறைக்கு சென்றுவிட்டு ஜாமீனில் வெளியே வந்தார். இந்த நிலையில், ஒரு வழக்கு சம்பந்தமாக ஆதம்பாக்கம் காவல்நிலையத்தில் கையெழுத்து போடாமல் இருந்துள்ளார். இதனால் போலீசார், லோகேஷ் வீட்டுக்கு சென்று கையெழுத்து போட வருமாறு அழைத்துள்ளனர். அப்போது வீட்டில் இருந்த லோகுவின் தாய் அம்மு, ‘’ என் மகனை காவல்நிலையத்துக்கு கொண்டு சென்றால் மண்ணெண்ணெய் ஊற்றி தற்கொலை செய்துகொள்வேன்’’ என்று மிரட்டல் விடுத்து உள்ளார். இதனால் போலீசார் அங்கிருந்து சென்றுவிட்டனர். இதனிடையே மீண்டும் போலீசார் தன்னை தேடிவருவார்கள் என்று நினைத்து பயந்துபோன லோகேஷ் தனது முகம், கழுத்து பகுதியில் பிளேடால் கிழித்துக்கொண்டு தற்கொலைக்கு முயன்றுள்ளார். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் கூச்சலிட்டார். இதையடுத்து அக்கம்பக்கத்தினர் வந்து, லோகேஷை மீட்டு அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர்.அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து தகவல் அறிந்ததும் ஆதம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்துவதற்காக மருத்துவமனைக்கு சென்றனர். ஆனால் அங்கிருந்து லோகேஷ் மாயமாகிவிட்டது தெரிந்தது. இதுபற்றி வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், லோகேஷை தீவிரமாக தேடி வருகின்றனர்….