திருவாரூர்: இலங்கையை சேர்ந்தவருக்கு இந்திய குடியுரிமை உள்ளதாக போலி பாஸ்போர்ட் எடுத்து கொடுத்த வழக்கில் திரைப்பட இயக்குநர் அசோகன், உட்பட 5 பேர் சிறையில் அடைக்கப்பட்டனர். ராமேஸ்வரம் மண்டபம் அகதிகள் முகாமில் கடந்த 2012ல் வசித்து வந்த இலங்கையை சேர்ந்த கஜன் என்பவர் திருவாரூர் மாவட்டம் மன்னார்குடி அருகே கூப்பாச்சிக்கோட்டையை முகவரியாக கொண்டு பாஸ்போர்ட் வைத்திருந்தார். கியூ பிரிவு போலீசார் சோதனை செய்ததில் அதுபோலி பாஸ்போர்ட் என்று தெரியவந்தது. விசாரணையில், மன்னார்குடியில் டிராவல் ஏஜென்சி நடத்தி வந்த இந்திரஜித், கூப்பாச்சி கோட்டையை சேர்ந்த பிரபாகரன், சென்னையை சேர்ந்த குண்டக்க மண்டக்க திரைப்பட இயக்குநர் அசோகன், திருவாரூர் எஸ்.பி அலுவலக கணினி உதவியாளர் ரவிச்சந்திரன், இளநிலை உதவியாளர் அசோக்குமார், கூப்பாச்சிக் கோட்டை தபால்காரர் மகாராஜன் மற்றும் பராவாக்கோட்டை போலீஸ் எஸ்.எஸ்.ஐ லோகநாதன் மற்றும் ஈசன், பத்மநாபன் ஆகியோருக்கு இதில் தொடர்பிருப்பது தெரியவந்தது. இதுதொடர்பாக 9 பேர் மீது கியூ பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை கடந்த 10 ஆண்டுகளாக திருவாரூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. கடந்த ஜூலை 29ம் தேதி இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கப்பட்டது. அதன்படி, எஸ்.பி அலுவலகத்தில் பணியாற்றிய ரவிச்சந்திரன், அசோக்குமார், தபால்காரர் மகாராஜன், எஸ்.எஸ்.ஐ லோகநாதன் ஆகிய 4 பேருக்கு தலா 4 ஆண்டுகள் சிறை தண்டனையும், கூப்பாச்சிக்கோட்டை பிரபாகரன் மற்றும் திரைப்பட இயக்குநர் அசோகன் ஆகிய இருவருக்கும் தலா 3 ஆண்டு சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இந்த தீர்ப்பு தொடர்பாக மேல்முறையீடு செய்வதற்காக ஒரு மாத காலம் அவகாசம் வழங்கப்பட்டது. இந்நிலையில் 6 பேரின் மனுவும் சென்னை உயர்நீதிமன்றத்தில் நேற்றுமுன்தினம் தள்ளுபடி செய்யப்பட்டது. இதில் எஸ்.எஸ்.ஐ லோகநாதனை தவிர, மற்ற குற்றவாளிகள் 5 பேர் திருவாரூர் மாவட்ட நீதிமன்றத்தில் நேற்று ஆஜரான நிலையில் ஏற்கனவே வழங்கப்பட்ட தண்டனையின் பேரில், 5 பேரையும் சிறையில் அடைக்க நீதிபதி பாலமுருகன் உத்தரவிட்டார். இதையடுத்து இயக்குநர் அசோகன் உள்பட 5 பேரும் திருச்சி மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். எஸ்.எஸ்.ஐ லோகநாதன் இன்று ஆஜராகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முக்கிய குற்றவாளியான இந்திரஜித் மற்றும் ஈசன், பத்மநாபன் ஆகிய மூவரும் வெளிநாட்டுக்கு தப்பி சென்று விட்டதாக கூறப்படுகிறது. இதில் இந்திரஜித், திரைப்பட இயக்குநர் அசோகனின் அக்காள் மகன்….