Sunday, May 12, 2024
Home » போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற பத்திர எழுத்தருக்கு நோட்டீஸ் அதிகாரிகள் தகவல் வாணியம்பாடியில்

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்ற பத்திர எழுத்தருக்கு நோட்டீஸ் அதிகாரிகள் தகவல் வாணியம்பாடியில்

by Karthik Yash

வேலூர், பிப்.27: வாணியம்பாடியில் போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்றதாக பத்திர எழுத்தருக்கு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்தனர். திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடி அடுத்த லாலாஏரி பகுதியை சேர்ந்தவர் விவசாயி கண்ணன்(78). இவர் தனக்கு சொந்தமான 1.75 ஏக்கர் நிலத்தை அவருடைய வாரிசுதாரர்களுக்கு தான செட்டில்மென்ட் பத்திரம் பதிவு செய்ய கடந்த 12ம் தேதி வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் காத்திருந்தனர். ஆனால், அன்றைய தினம் இரவு 9 மணி வரை காத்திருந்த கண்ணன் மற்றும் அவரது உறவினர்கள் திடீரென சார்பதிவாளர் அலுவலகத்தின் உள்ளே அமர்ந்து தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இதையடுத்து, சார் பதிவாளர் உடனடியாக கண்ணனின் தான செட்டில்மென்டை நிறைவு செய்து அனுப்பி வைத்தார். வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் அடிக்கடி இதுபோன்ற சம்பவங்கள் அரங்கேறி வருவதால் இதுதொடர்பாக அந்த அலுவலகத்தில் திருப்பத்தூர் மாவட்ட பதிவாளர் பிரகாஷ் ஆய்வு செய்து விசாரணை நடத்தி அறிக்கை தாக்கல் செய்யும்படி வேலூர் பத்திரப்பதிவு மண்டல துணை தலைவர் சாமிநாதன் உத்தரவிட்டுள்ளார். இதுகுறித்து பத்திரப்பதிவுத்துறை அதிகாரிகள் கூறுகையில், ‘வாணியம்பாடி சார் பதிவாளர் அலுவலகத்தில் தொடர்ந்து பொதுமக்களின் பத்திரங்களை பதிவு செய்வதில் தாமதம் ஏற்படுத்தி வருவதாக குற்றச்சாட்டு உள்ளது. உண்மையாகவே சார் பதிவாளர் தவறு செய்கிறாரா? அல்லது அங்கு பத்திர எழுத்தர்கள் தவறு செய்கிறார்களா? என்பது குறித்து விசாரணை நடத்தப்பட்டது. இதில் ஒரு பத்திர எழுத்தர் உரிய ஆவணங்கள் இன்றி, போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ய முயன்றதாக தெரியவந்துள்ளது. இதுகுறித்து அவருக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. அந்த நோட்டீசுக்கு உரிய விளக்கம் இல்லாத பட்சத்தில் அவரின் பத்திர எழுத்தருக்கான உரிமம் ரத்து செய்யப்படும்’ என்றனர்.

You may also like

Leave a Comment

7 + twenty =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi