சென்னை: புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த 3 போலீசார் சஸ்பெண்ட் செய்யப்பட்டுள்ளனர். சென்னையில் கடந்த 11ம் தேதி போலீஸ் அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் அவசர ஆலோசனை நடத்தினார். இந்தக் கூட்டத்தில், மாநிலம் முழுவதிலும் இருந்து அதிகாரிகள் கலந்து கொண்டனர். மாநிலம் முழுவதும் போதைப் பொருள் விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று போலீஸ் அதிகாரிகளுக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டார். மேலும் போதைப் பொருள் கடத்தலுக்கு உடந்தையாக இருந்த போலீசார் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் எச்சரித்திருந்தார்.இதைத் தொடர்ந்து தமிழகம் முழுவதும் போலீஸ் அதிகாரிகள் போதைப் பொருளுக்கு எதிரான வேட்டையை தொடங்கியுள்ளனர். இந்தநிலையில், புதுக்கோட்டை மாவட்டத்தில் போதைப் பொருள் விற்பனைக்கு உடந்தையாக புதுக்கோட்டை ஆயுதப்படை காவலர்கள் அஸ்வந்த், சேவியர் ஜான்சன், பழனிசாமி ஆகியோர் இருப்பதாக அம்மாவட்ட எஸ்பி வந்திதா பாண்டேக்கு தெரியவந்தது. இது குறித்து உளவுத்துறை மூலம் விசாரிக்க உத்தரவிட்டார். விசாரணையில் அவர்கள் போதைப் பொருள் விற்பனை செய்யும் ஆசாமிகளுக்கு உடந்தையாக இருப்பது தெரியவந்ததால், அவர்கள் 3 பேரையும் அதிரடியாக சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார்.முதல்வரின் உத்தரவைத் தொடர்ந்து புதுக்கோட்டை மாவட்ட எஸ்பி அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது, அம்மாவட்ட போலீசாருக்கு கடும் அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது….