அண்ணா நகர்: சென்னை அண்ணாநகர் சாந்தி காலனியில் கடந்த 12ம் தேதி ஆப்பிரிக்கா நாட்டை சேர்ந்த பிரிஸ்கா அம்சா (32) என்பவர் ஓலா காரில் போதைப்பொருளை கடத்தி வந்ததாக கைது செய்யப்பட்டார். கடந்த 23ம் தேதி அவரை அண்ணாநகர் போலீசார் காவலில் எடுத்து 3 நாள் விசாரித்தனர். பிறகு 25ம் தேதி மீண்டும் புழல் சிறையில் அடைத்தனர். பிரிஸ்கா கொடுத்த ரகசிய தகவலின்படி தனிப்படை போலீசார் செல்போன்களை ஆய்வு செய்து டவர் மூலம் கண்காணித்தனர். போதைப்பொருள் சப்ளை செய்யும் கும்பலை கைது செய்ய அண்ணாநகர் துணை ஆணையர் விஜயகுமார் தலைமையில் 3 தனிப்படை அமைக்கப்பட்டது.இந்நிலையில், புதுச்சேரியில் வெளிநாட்டை சேர்ந்த ஒரு வாலிபர் லாட்ஜில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. நேற்று அங்கு சென்ற தனிப்படையினர் ஒரு லாட்ஜில் பதுங்கி இருந்த நைஜீரியாவை சேர்ந்த வாலிபரை சுற்றிவளைத்து கைது செய்தனர். பின்னர் அவரை அண்ணாநகர் காவல் நிலையம் அழைத்து வந்து விசாரித்தனர். அதில், நைஜீரியாவை சேர்ந்த லியோனார்டு (32) என்றும், கோகைன் போதைப்பொருளை ஆப்பிரிக்கா நாட்டில் மொத்தமாக வாங்கி வந்து, வெளிநாட்டு பெண்களை சுற்றுலாவிற்கு தமிழகத்திற்கு செல்வதுபோல் அழைத்து விற்பனை செய்தது தெரியவந்தது. கைது செய்யப்பட்ட வியோனார்டுவிடம் தொடர்ந்து விசாரணை நடக்கிறது. மேலும் கோகைன் போதைப்பொருளை சப்ளை செய்யும் கும்பலை பிடிப்பதற்கு தனிப்படை தீவிர வேட்டையில் ஈடுபட்டுள்ளனர்….