போடி, மார்ச் 24: போடி தாசில்தார் அலுவலகத்திற்கு 76 கொண்டுவரப்பட்டு பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளது. தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தல் வரும் ஏப்ரல் 19ம் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில் தேனி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பகுதிகளில் தேர்தல் முன்னேற்பாட்டு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன.
தேர்தல் நடத்தும் தேர்தல் அலுவலரும், தேனி கலெக்டருமான சஜீவனா பணிகளை தீவிரமாக ஆய்வு செய்து வருகிறார். இந்த நிலையில் போடி சட்டமன்றத் தொகுதிக்குட்பட்ட வாக்காளர்களுக்காக 315வாக்கு மையங்கள் தயார் செய்யப்பட்டுள்ளது. இந்த மையங்களில் வாக்குப்பதிவுக்காக நேற்று தேனி கலெக்டர் அலுவலகத்தில் இருந்து 76 வாக்குப் பதிவு இயந்திரங்கள் மினி லாரி மூலமாக போடி தாசில்தார் அலுவலகத்திற்கு கொண்டு வரப்பட்டது.
வாக்குப்பதிவு இயந்திரங்களை போடி தாசில்தார் மணிமாறன் தலைமையில் 76 வாக்குப் பதிவு இயந்திரங்கள அலுவலகத்தில் பாதுகாப்பாக அடுக்கி வைக்கப்பட்டது. இதையடுத்து தாசில்தார் அலுவலகத்திற்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது.