போடி : போடி மற்றும் சின்னமனூரில் குவாரி, ஆற்றில் மூழ்கி 3 மாணவர்கள் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.சென்னை அம்பத்தூர் கள்ளிக்குப்பத்தை சேர்ந்தவர் மகேஷ். இவரது மனைவி பாரதி, மகன்கள் விஷால் (16), பிளஸ் 2 மாணவர். கார்த்திக் (14). இவர்கள் அனைவரும் தேனி மாவட்டத்திற்கு நேற்று முன்தினம் சுற்றுலா வந்தனர். தேனி அருகே வீரபாண்டி கவுமாரியம்மன் கோயில், சின்னமனூர் அருகே உள்ள ஹைவேவிஸ், மேகமலை ஆகிய இடங்களை சுற்றிப்பார்த்துவிட்டு மாலையில் போடிக்கு சென்றனர். நேற்று காலை போடி அருகே உள்ள குரங்கணி, கொட்டக்குடி ஆகிய பகுதிகளை சுற்றிப்பார்த்துவிட்டு, வடக்கு மலைப்பகுதியில் சிறக்காடு கிராமத்தை அடுத்த, கோம்பை ஆற்றில் குளித்தனர். தொடர் மழையால் ஆற்றில் நீர்வரத்து அதிகமாக உள்ளது. இதில், விஷால் நீர்ச்சூழலில் சிக்கி பரிதாபமாக இறந்தார். போடி தீயணைப்பு நிலைய அலுவலர் சக்திவேல் தலைமையிலான வீரர்கள், நீர்ச்சூழலில் சிக்கிய விஷால் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக போடி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். போடி நகர் போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகிறார்.குவாரியில் மூழ்கி 2 மாணவர்கள் பலிதேனி மாவட்டம், சின்னமனூர் அருகே உள்ள காமாட்சிபுரத்தை சேர்ந்த கோடாங்கி பாலமுருகன் மகன் லோகேஷ் (14). அதே பகுதியைச் சேர்ந்த நாட்டாமை கணேசன் மகன் கௌதம் (14). இவர்கள் 9ம் வகுப்பு மாணவர்கள். இருவரும் வேப்பம்பட்டி பகுதியில் உள்ள நல்லுண்டு பாறை குவாரி அருகே நேற்று விளையாடினர். அப்போது குவாரியில் உள்ள தண்ணீரில் இருவரும் தவறி விழுந்ததாக கூறப்படுகிறது. நீச்சல் தெரியாமல் அவர்கள் தத்தளித்தனர். இதைக் கண்ட அக்கம்பக்கத்தினர் ஓடைப்பட்டி போலீசாருக்கு தகவல் அளித்தனர். அவர்கள் வந்து இறந்த நிலையில், மாணவர்களின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். ஓடைப்பட்டி போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்….