பொன்னமராவதி, பிப்.23: பொன்னமராவதி அருகே உள்ள வேந்தன்பட்டி மீனாட்சி அம்பாள் சமேத சொக்கலிங்கேஸ்வரர் மற்றும் நெய் நந்தீஸ்வரர் கோயில் கும்பாபிஷேகம் நடைபெற்றது. நந்தி எம்பெருமான் பசுநெய் சாத்தப்பட்டு நெய்நந்தீஸ்வரராக அருள்பாலிக்கும் சிறப்புடைய இக்கோயிலின் 9வது குடமுழுக்கு விழா நடத்த நகரத்தார்கள் சார்பில் முடிவு செய்யப்பட்டு திருப்பணிகள் நடைபெற்றது.
இதையடுத்து கோயிலின் முன் அமைக்கப்பட்ட யாசாலையில் ஐந்து கால யாகபூஜைகள் நடைபெற்றது. நேற்று காலை 10 மணியளவில், திருக்கண்ணங்குடி பாலாமணி சிவாச்சாரியார் தலைமையிலான சிவாச்சாரியார்கள் யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனித நீரினை கும்பத்தில் ஊற்றி குடமுழுக்கு செய்தனர். விழாவில் ஞான சரஸ்வதி சிலை பிரதிஷஸ்டை செய்யப்பட்டது.
அதையடுத்து மீனாட்சி திருக்கல்யாணம் மற்றும் பஞ்சமூர்த்திகள் திருவீதிஉலா நடைபெற்றது. விழாவில் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களைச் சார்ந்த திரளான பொதுமக்கள் பங்கேற்று வழிபட்டனர். விழா பாதுகாப்பு ஏற்பாடுகளை பொன்னமராவதி போலீசார் செய்திருந்தனர். விழாவையொட்டி தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் சார்பில் சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டது. விழாவையொட்டி ஆன்மிக சொற்பொழிவுகள் மற்றும் இன்னிசை நிகழ்வுகள் நடைபெற்றது.