செங்கல்பட்டு: தமிழகம் முழுவதும் நீர்ப்பிடிப்பு பகுதிகளில் ஆக்கிரமித்து வைத்துள்ள கடை மற்றும் வீடுகள் அனைத்தையும் அகற்ற சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. அதனடிப்படையில் செங்கல்பட்டு மாவட்டம் பொத்தேரி பெரிய ஏரிக்கு உட்பட்ட நீர்ப்பிடிப்பு பகுதி பிள்ளையார் கோயில் தெருவில் ஆக்ரமித்து கட்டப்பட்ட 12 கடைகளை அகற்ற வலியுறுத்தி மாவட்ட நிர்வாகம் தரப்பில் கடந்த 3 மாதமாக ஆக்கிரமிப்பு கடை உரிமையாளர்களுக்கு மூன்று முறை நோட்டீஸ் அனுப்பிருந்தது. ஆனால் இதுவரை அவர்கள் கடையை காலிபண்ண முன்வரவில்லை இந்நிலையில், பொத்தேரி பிள்ளையார் கோயில் பகுதியில் ஆக்கிரமித்து கட்டப்பட்ட 12 கடைகளை அகற்றும் பணி நேற்று செங்கல்பட்டு வட்டாட்சியர் நடராஜன் தலைமையில், 100க்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பில் பொக்லைன் இயந்திரம் மூலம் இடிக்கும் பணி நடைபெற்றது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்த கடை உரிமையாளர்கள், கடையில் உள்ள பொருட்களை எடுப்பதற்கு கால அவகாசம் அளிக்க வேண்டும். பொருட்களை எடுத்த பிறகு கடைகளை இடிக்கலாம் என தெரிவித்தனர். இதனையடுத்து, கடைகளை இடிக்கும் பணி நிறுத்தப்பட்டது. இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது….