தேவதானப்பட்டி, மார்ச் 6: தமிழகத்தில் பிளஸ் 2 மாணவர்களுக்கு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில் ஒலிபெருக்கிகளுக்கு போலீசார் கட்டுப்பாடு விதிக்கவேண்டும் பெற்றோர்கள், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். தமிழகம் முழுவதும் தற்போது 12ஆம் வகுப்பு, 11ம் வகுப்பு பொதுத்தேர்வு தொடங்கி நடைபெற்று வருகிறது.
விரைவில் 10ம் வகுப்பு பொதுத்தேர்வு துவங்கவுள்ளது. தேர்வு நேரங்கள் தவிர மற்ற நேரங்களில் மாணவர்கள் தங்களது வீடுகளில் படித்து வருகின்றனர். தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் அதன் சுற்றுவட்டார கிராமங்களில் ஊர், இல்ல விழாக்களில் பெரிய ஒலிபெருக்கி, கூம்பு வடிவ குழாய் அதிக சத்தத்துடன் பயன்படுத்துகின்றனர்.
இது தவிர மெயின் ரோட்டிலும் ஸ்பீக்கர்களை வைக்கின்றனர். இது பொதுத் தேர்வுக்கு படிக்கும் மாணவர்களுக்கு இடையூறாக உள்ளது. இந்த நிலையில், தேவதானப்பட்டி மற்றும் ஜெயமங்கலம் பகுதிகளில் மாணவர்கள் இடையூறுகள் இல்லாமல் கவனமாக படிக்கும் வகையில் ஒலிபெருக்கி பயன்பாட்டுக்கு கட்டுப்பாடுகள் விதிக்க வேண்டும் என பெற்றோர், சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.