துரைப்பாக்கம்: நீலாங்கரை பகுதியை சேர்ந்தவர் லட்சுமணன் (70). இவரது பேரன் கிஷோர்குமார் (12). இச்சிறுவன் கொட்டிவாக்கத்தில் உள்ள தனியார் பள்ளியில் 7ம் வகுப்பு படித்து வந்தான். நேற்று முன்தினம் மாலை தனது பேரனை அழைத்துக் கொண்டு லட்சுமணன் அப்பகுதியில் உள்ள கடைக்குச் சென்றுவிட்டு பைக்கில் வீட்டிற்கு புறப்பட்டார். பாலவாக்கம் பேருந்து நிறுத்தம் அருகே சென்றபோது, பின்னால் வந்த அரசு விரைவு பேருந்து பைக் மீது மோதியது. இதில் இருவரும் பலத்த காயமடைந்தனர். அவர்களை மீட்டு, அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி கிஷோர்குமார் நேற்று முன்தினம் இரவு பரிதாபமாக உயிரிழந்தான். படுகாயமடைந்த லட்சுமணன் உயிருக்கு ஆபத்தான நிலையில் சிகிச்சை பெற்று வருகிறார். இதுகுறித்து அடையாறு போக்குவரத்து புலனாய்வு போலீசார் வழக்கு பதிவு செய்து, விபத்துக்கு காரணமான அரசு விரைவு பேருந்து ஓட்டுனர் கள்ளக்குறிச்சி மாவட்டம், திருக்கோவிலூரை சேர்ந்த ஜோதிலிங்கம் (43) என்பரை கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். விபத்தில் சிறுவன் பலியான சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது….