பாடாலூர், ஜன. 3: திண்டுக்கல் மாவட்டம் முள்ளிப்பாடி அருகேயுள்ள செட்டியபட்டி கிராமத்தை சேர்ந்த சந்திரசேகரன் மகன் அருண் மில்டன் (25). இவர் செங்கல்பட்டு வேளாண்மை உதவி இயக்குனர் அலுவலகத்தில் வேளாண் விற்பனை பிரிவில் உதவி வேளாண்மை அலுவலராக பணியாற்றி வந்தார். புத்தாண்டு கொண்டாட்டத்துக்காக சொந்த ஊருக்கு வந்த அருண் மில்டன் நேற்று முன்தினம் இரவு திண்டுக்கல்லில் இருந்து தனது இருசக்கர வாகனத்தில் புறப்பட்டார். பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா திருச்சி- சென்னை தேசிய நெடுஞ்சாலையில் அருண்மில்டன் வந்துகொண்டிருந்தார்.
அப்பகுதியில் உள்ள நாரணமங்கலம் அருகே தேசிய நெடுஞ்சாலையில் மேம்பால பணி நடைபெறுகிறது. இதனால் அந்த வழியாக வரும் வாகனங்கள் அருகில் அமைக்கப்பட்டுள்ள சர்வீஸ் சாலையில் செல்லும் வகையில் பேரி கார்டு வைக்கப்பட்டுள்ளது. சர்வீஸ் ரோட்டில் உள்ள பேரிகார்டு மீது எதிர்பாராதவிதமாக இருசக்கர வாகனம் வேகமாக மோதியது. இதில் தூக்கி வீசப்பட்டு சம்பவ இடத்திலேயே அருண் மில்டன் உயிரிழந்தார். இதுகுறித்து பாடாலூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.