பேராவூரணி, மே 6: பேராவூரணி சட்டமன்ற தொகுதி அதம்பை ஊராட்சியில் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என கிராம மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது குறித்து அதம்பை கிராம பொதுமக்கள் சார்பில், தமிழர் அறம் இயக்கத் தலைவர் ராமசாமி மற்றும் கிராமத்தினர் வீரப்பன், முருகேசன் ஆகியோர், தஞ்சாவூர் எம்பி பழநிமாணிக்கம், பேராவூரணி எம்எல்ஏ அசோக்குமார் ஆகியோருக்கு அனுப்பி உள்ள கோரிக்கை மனுவில் கூறியுள்ளது. தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி தாலுகா, அதம்பை ஊராட்சியில் சுமார் 8 ஆயிரம் பேர் வசித்து வருகிறோம். எங்கள் ஊரில் இதுவரை சமுதாயக் கூடம் அமைக்கப்படவில்லை. இதனால், மழை, வெள்ள காலங்களில் பாதிக்கப்படுபவர்களை தங்க வைக்கவும், காதணி, வளைகாப்பு, திருமண விழாக்கள் போன்ற நிகழ்வுகளை நடத்தவும் இடமின்றி தவித்து வருகிறோம். எனவே தங்களது தொகுதி மேம்பாட்டு நிதியில் இருந்து, நிதி ஒதுக்கீடு செய்து எங்கள் ஊராட்சியில் சமுதாயக் கூடம் கட்டித் தர வேண்டும் என மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.