பட்டிவீரன்பட்டி : பெரும்பாறை மலைப்பகுதியில் காபிக்கு நிரந்தர விலை கிடைக்காததால் விவசாயிகள் பெரும்பாலானோர் ஏலக்காய் பயிரிட ஆர்வம் காட்டி வருகின்றனர். கொடைக்கானல் கீழ்மலை பகுதிகளான பெரும்பாறை, மஞ்சள்பரப்பு, கானல்காடு, கொங்கபட்டி, கட்டக்காடு உள்ளிட்ட 20க்கும் மேற்பட்ட மலைக்கிராமங்களில் காபி விவசாயம் நடந்து வருகிறது. இம்மலைப்பகுதியின் சீதோஷ்ண நிலை காபி விவசாயத்திற்கு ஏற்புடையதாக உள்ள காரணத்தினால் தொன்றுதொட்டு இப்பகுதியில் காபி விவசாயம் நடந்து வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக சில மலைத்தோட்ட விவசாயிகள் தங்களது நிலத்தின் ஒரு பகுதியில் ஏலக்காய் பயிரிட்டு வந்தனர். இங்கு பறிக்கப்படும் ஏலக்காய்கள் பதப்படுத்தப்பட்டு தேனி மாவட்டம் போடி ஏல மையத்துக்கு விற்பனைக்காக அனுப்பி வைக்கப்படுகின்றன.ஏலக்காய் விவசாயத்தில் நல்ல லாபம் உள்ளதால், மற்ற காபி விவசாயிகளும் ஏலக்காய் பயிரிடுவதில் ஆர்வம் காட்டி வருகின்றனர். தற்போது இம்மலைப்பகுதியில் விவசாயிகள் தங்களது நிலத்தில் உள்ள காபி செடிகளை அகற்றிவிட்டு ஏலக்காய் பயிரிட்டு வருகின்றனர். இதுகுறித்து காபி விவசாயிகள் கூறுகையில், ‘இம்மலைப்பகுதியில் காபி தான் பிரதான விவசாயமாக இருந்து வந்தது. காபிக்கு நிரந்தரமான விலை கிடைக்காததால் விவசாயிகள் நஷ்டமடைந்து வருகின்றனர். இதனால் இப்பகுதி விவசாயிகள் காபி செடிகளை அகற்றி விட்டு ஏலக்காய் பயிரிட்டு வருகின்றனர். மேலும் தாண்டிக்குடியை மையமாக கொண்டு ஏலக்காய் ஆராய்ச்சி நிலையம் செயல்பட துவங்கியுள்ளதால், ஏலக்காய் விவசாயம் உயிர்பெற துவங்கியுள்ளது’ என்றார்….