Saturday, May 18, 2024
Home » பெரியமாரியம்மன் வகையறாகோயில்களில் கம்பம் எடுக்கும் விழா

பெரியமாரியம்மன் வகையறா
கோயில்களில் கம்பம் எடுக்கும் விழா

by Karthik Yash

ஈரோடு, ஏப்.9: ஈரோடு பெரிய மாரியம்மன் வகையறா கோயில்களில் கம்பம் எடுக்கப்பட்டு ஊர்வலமாக கொண்டு செல்லப்பட்டது. முன்னதாக நடந்த மஞ்சள் நீராட்டு விழாவில், மஞ்சள் மாநகரமே மஞ்சள் நீரால் குளிர்ந்தது. ஈரோடு மாநகரில் பெரியமாரியம்மன் கோயில் மற்றும் அதன் வகையறாவை சேர்ந்த சின்னமாரியம்மன், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில்கள் மிகவும் பிரசித்தி பெற்றவை. இந்த கோயில்களில் ஆண்டுதோறும் குண்டம் மற்றும் தேர்த்திருவிழா வெகுவிமர்சையாக கொண்டாடப்படும். கடந்த மாதம் 21ம் தேதி பூச்சாட்டுதலுடன் விழா துவங்கியது. இதையடுத்து, 3 கோயில்களிலும் கடந்த மாதம் 25ம் தேதி இரவு கம்பங்கள் நடப்பட்டன.

இதைத்தொடர்ந்து, ஈரோடு மாநகர் மற்றும் மாநகரை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த மக்கள், விழா துவங்கியது முதல் தினமும் காவிரி ஆற்றில் இருந்து பால் குடம், தீர்த்தக் குடம் எடுத்து ஊர்வலமாக வந்து 3 கோயில்களிலும் உள்ள கம்பத்திற்கு புனிதநீர் ஊற்றி அம்மனை வழிபட்டு சென்றனர். மேலும், ஏராளமான பக்தர்கள் அலகு குத்தி வந்தும், அக்னி சட்டி, பூங்கரகம் எடுத்து வந்தும் அம்மனுக்கு தங்களது நேர்த்திக்கடனை செலுத்தினர். விழாவின் முக்கிய நிகழ்வுகளான கடந்த 4ம் தேதி காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் குண்டம் விழாவும், 5ம் தேதி சின்னமாரியம்மன் கோயில் தேரோட்டமும் நடைபெற்றது.

இந்நிலையில், விழாவின் இறுதி நிகழ்வான நேற்று ஈரோடு பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கம்பம் அகற்றும் நிகழ்ச்சி நேற்று மதியம் 3 மணிக்கு துவங்கியது. பெரியமாரியம்மன், சின்னமாரியம்மன், காரை வாய்க்கால் மாரியம்மன் கோயில்களில் கம்பங்கள் அகற்றப்பட்டதும், அந்தந்த கோயிலில் இருந்து பூசாரிகள் கம்பத்தை தோளில் சுமந்தபடி ஊர்வலமாக வந்தனர். இதில், பெரியமாரியம்மன் கோயில் கம்பம் பன்னீர்செல்வம் பார்க் வழியாகவும், சின்னமாரியம்மன் கோயில் கம்பம் அக்ரஹாரம் வீதி வழியாகவும், காரைவாய்க்கால் மாரியம்மன் கோயில் கம்பம் கச்சேரி வீதி வழியாகவும் ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, மணிக்கூண்டு பகுதியில் 3 கம்பங்களும் ஒன்று சேர்ந்தது.

அதன்பின், மூன்று கோயில்களின் கம்பங்களும் ஈஸ்வரன் கோவில் வீதி வழியாக காமராஜர் வீதி, மீனாட்சி சுந்தரனார் சாலை, அரசு மருத்துவமனை ரவுண்டானா, மேட்டூர் சாலை, ஈரோடு பஸ் ஸ்டாண்ட், ஸ்வஸ்திக் கார்னர், சத்தி சாலை, எல்லை மாரியம்மன் கோயில், மணிக்கூண்டு, பெரியார் வீதி, மரப்பாலம் மண்டபம் வீதி, ஆர்.கே.வி. சாலை, டவுன் போலீஸ் ஸ்டேஷன், அக்ரஹாரம் வீதி வழியாக இரவு காரைவாய்க்காலை அடைந்தது. பின்னர் மூன்று கோயில்களின் கம்பங்களும் வாய்க்காலில் விடப்பட்டது.

பக்தர்கள் வழிபாடு
முன்னதாக, கம்பம் ஊர்வலத்தின் போது, ஊர்வல பாதையில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் மற்றும் பொதுமக்கள் நின்று கம்பங்களின் மீது உப்பும், மிளகும் வீசி வழிபட்டனர். மேலும், கம்பம் ஊர்வலத்தில் பலர் நேர்த்திக்கடனுக்காக பல்வேறு வேட மிட்டு ஊர்வலத்தில் கலந்து கொண்டனர். கோயில்களில் நடப்பட்டுள்ள கம்பங்கள் பிடுங்கியதும், ஈரோடு மாநகர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் மஞ்சள் நீராட்டு நடந்தது. இதில் சிறுவர், சிறுமிகள், இளைஞர்கள், பெண்கள் என அனைத்து மக்களும் ஒருவர் மீது ஒருவர் மஞ்சள் நீரை ஊற்றி மஞ்சள் நீராட்டு விழாவை மகிழ்ச்சியாக கொண்டாடினர். இதனால், மஞ்சள் மாநகரமே நேற்று மஞ்சள் நீரால் குளிர்ந்தது. ஈரோட்டில் கம்பம் ஊர்வலத்தையொட்டி ஊர்வலப்பாதையில் அசம்பாவித சம்பவங்கள் நடைபெறாமல் இருக்க ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். கம்பம் ஊர்வலத்தையொட்டி, ஈரோடு மாநகரில் நேற்று மதியம் 2 மணி முதல் இரவு 9 மணி வரை நகரில் போக்குவரத்து மாற்றம் செய்து மாவட்ட காவல் துறை உத்தரவிட்டிருந்தது. மேலும், இவ்விழாவையொட்டி நேற்று மதியத்திற்கு மேல் கடைகள், வணிக நிறுவனங்கள் என அனைத்திருக்கும் விடுமுறை விடப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.

You may also like

Leave a Comment

twenty + nineteen =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi