ராமநாதபுரம்: ராமநாதபுரம் அருகே பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா மத நல்லிணக்க சந்தனக்கூடு திருவிழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் துவங்கியது. ராமநாதபுரம் அருகே உள்ள பெரியபட்டிணத்தில் மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் தர்ஹா உள்ளது. மாவட்டத்தில் ஏர்வாடி தர்ஹாவிற்கு அடுத்தப்படியாக அனைத்து சமுதாய மக்களால் வழிபடக் கூடிய மதநல்லிணக்க தர்ஹாவாக விளங்குகிறது. இங்கு ஆண்டு தோறும் பக்ரீத் மாத வளர்பிறையில் சந்தனகூடு மற்றும் கந்தூரி திருவிழா நடத்தப்படுகிறது. அதன்படி நேற்று முன்தினம் மாலையில் கொடியேற்றத்துடன் விழா துவங்கியது. முன்னதாக பெரியபட்டிணம் பெரிய பள்ளிவாசலில் இருந்து அலங்கரிகப்பட்ட பல்லக்கில் புனித கொடி ஊர்வலமாக எடுத்து வரப்பட்டு, சிறப்பு மவுலீது(புகழ் மாலை)ஓதப்பட்டு கொடியேற்றப்பட்டது. தொடர்ந்து வருகின்ற ஜூலை 5ம் தேதி முதல் 6ம் தேதி வரை புகழ்பெற்ற சந்தனகூடு ஊர்வலம் நடக்கிறது. தர்ஹாவிலுள்ள மகான் செய்யதலி ஒலியுல்லாஹ் மக்பராவில் சந்தனம் பூசப்பட்டு சிறப்பு தொழுகை மற்றும் வழிபாடு நடைபெறுகிறது. ஜூலை 14ம் தேதி கொடி இறக்கத்துடன், பொதுமக்களுக்கு நேர்ச்சை வழங்கப்பட்டு விழா நிறைவடைகிறது. விழா ஏற்பாடுகளை நிர்வாகிகள் மற்றும் விழா கமிட்டியாளர்கள் செய்து வருகின்றனர்.