உடுமலை, மே 3: திருமூர்த்தி அணையில் இருந்து தளி வாய்க்கால் மூலம் 8 குளங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதில் உடுமலை அருகே உள்ள பெரிய குளமும் ஒன்று. இந்த குளத்தின் அருகே தடுப்பணை (செக்டேம்) கட்டப்பட்டுள்ளது. மழைக்காலங்களில் அதிகளவில் நீர் சென்றதால், இதன் அருகே செல்லும் சாலையில் உயர்மட்ட பாலம் கட்டும் பணி நடந்து வருகிறது.பாலம் பணி காரணமாக, வாகனங்கள் மாற்றுப்பாதையில் திருப்பி விடப்பட்டுள்ளன.
இதனால் பேருந்துகள் உள்ளிட்ட வாகனங்கள், தடுப்பணையை ஒட்டியுள்ள சிமென்ட் தரைப்பகுதி வழியாக செல்கின்றன. அருகில் வழித்தடம் இருந்தும், தடுப்பணையை ஒட்டி செல்வதால் சிமென்ட் காரைகள் பெயர்ந்து சேதம் அடையும் நிலை உள்ளது. எனவே, பொதுப்பணித்துறையினரும், நெடுஞ்சாலை துறையினரும் இணைந்து மாற்று வழித்தடம் ஏற்படுத்த வேண்டும் என பொதுமக்கள், விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.