பெரம்பலூர்: பெரம்பலூர் மற்றும் வேப்பந்தட்டை பகுதிகளில் வன உயிரின வார விழாவை முன்னிட்டு நடந்த பேரணியில் மாணவர்கள் பங்கேற்றனர். மேலும் கட்டுரை, பேச்சு, ஓவியப்போட்டிகள் நடத்தி வன பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. தமிழ்நாடு வனத்துறை, பெரம்பலூர் வனக்கோட்டத்தில் நேற்று வன உயிரின வார விழா முன்னிட்டு, பெரம்பலூர் மாவட்ட வன அலுவலர் குகனேஷ் தலைமையில், பெரம்பலூர் அரசு மேல் நிலைப்பள்ளி மற்றும் அரசு பெண்கள் உயர்நிலைப்பள்ளியில், பெரம்பலூர் வனச்சரகம் சார்பில் பள்ளி மாணவ, மாணவியர்களுக்கான ஓவியப்போட்டி, கட்டுரைப் போட்டிகள் நடத்தப்பட்டது. மேலும் மாணவர்களுக்கு வனங்கள் மற்றும் வனப்பாதுகாப்பு பற்றிய விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில், பெரம்பலூர் வனச்சரக அலுவலர் பழனிகுமரன் மற்றும் வனவர்கள் பிரதீப் குமார், சிங்காரவேலன் பள்ளி தலைமை ஆசிரியர்கள், ஆசிரியர்கள், வனக்காப்பாளர்கள் மற்றும் மாணவ, மாணவியர் பங்கேற்றனர்.