பெரம்பலூர்: பெரம்பலூர் மாவட்ட போலீசார் ஏடிஎஸ்பி தலைமையில் தீண்டாமை ஒழிப்பு தின உறுதிமொழியை ஏற்றுக் கொண்டனர். ஒவ்வொரு வருடமும் ஜனவரி 30ம்தேதி தீண்டாமை ஒழிப்பு தினமாக கடைபிடிக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் பெரம்பலூர் மாவட்ட எஸ்பி ஷ்யாம்ளா தேவி உத்தரவின் பேரில், பெரம்பலூர் மாவட்ட ஏடிஎஸ்பி (தலைமையிடம்) மதியழகன் தலைமையில், மாவட்டத்தில் பணிபுரியும் காவல்துறையினர் மற்றும் அமைச்சுப் பணியாளர்கள் அனைவரும் தீண்டாமை ஒழிப்பு தின உறுதி மொழி ஏற்றுக்கொண்டனர். இதன்படி நமது அரசியலமைப்பின்படி தீண்டாமை ஒழிக்கப்பட்டுவிட்டது என்பதை அறிவேன். தீண்டாமையை அடிப்படையாக கொண்டு எவர்மீதும் தெரிந்தோ தெரியாமலோ சமூக வேற்றுமையை மனம், வாக்கு, செயல் என்ற எந்த வகையிலும் கடைபிடிக்க மாட்டேன் என்று இதனால் உளமாற உறுதியளிக்கிறேன். அரசியலமைப்பின் கருத்திற்கிணங்க சமய வேறுபாடற்ற சுதந்திர சமுதாயத்தை உருவாக்குவதில் நேர்மையுடனும் உண்மையுடனும் பணியாற்றுவது எனது கடமையாகும் என்பதையும் உணர்வேன்.