பரமக்குடி, பிப். 29: ராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி மணிநகரை சேர்ந்த மருத்துவ தம்பதி பாலச்சந்தர் – கிருஷ்ணவேணி. இருவரும் ஓய்வு பெற்ற அரசு மருத்துவர்கள். 2018ம் ஆண்டு மே 21ம் தேதி நள்ளிரவு கிருஷ்ணவேணி வீட்டில் உறங்கிக் கொண்டிருந்தபோது வீட்டிற்குள் நுழைந்த வட மாநிலத்தைச் சேர்ந்த நான்கு பேர் கொண்ட மர்மகும்பல் மருத்துவர் கிருஷ்ணவேணியை கயிற்றால் கட்டிப்போட்டு வீட்டிலிருந்த 37 சவரன் தங்க நகை, 20 கிலோ வெள்ளி பொருட்கள், ஒரு வைரத்தோடு உள்ளிட்டவற்றை திருடி கொண்டு தப்பி ஓடியது.
இந்த வழக்கில் பரமக்குடி டவுன் போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரணை செய்து வந்தனர். இந்த நிலையில், கைரேகை பிரிவு போலீசார் உதவியுடன் மகாராஷ்டிரா மாநிலம் அவுரங்காபாத் மாவட்டத்தைச் சேர்ந்த அனிக்கோட் ராம்புரோஸ் சாலங்கி(36)என்ற இளைஞரை கைது செய்துள்ளனர். மேலும் இந்த கொள்ளை சம்பவத்தில் ஈடுபட்ட மூன்று குற்றவாளிகளை போலீசார் தேடி வருகின்றனர். கைது செய்த வட மாநில இளைஞர் அனிக்கோட்ராம்பு ரோஸ் சாலங்கியை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.