நெல்லை, ஏப். 13: நெல்லை அருகே பெண் போலீசை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டல் விடுத்த வாலிபரை போலீசார் கைது செய்தனர். சீவலப்பேரி காவல் நிலையத்தில் பணிபுரிந்து வருபவர் காவேரி. இவர், பஜார் ரோட்டில் பாதுகாப்பு பணியில் இருந்தார். அப்போது சீவலப்பேரியை சேர்ந்த ராஜேந்திரன் மகன் வேல்முருகன்(28) என்பவர் மதுபோதையில் வந்து பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்தும் விதமாக அங்குள்ள தென்னை மரத்தில் ஏற முயற்சித்து, ரகளையில் ஈடுபட்டுள்ளார். இதனை காவேரி கண்டித்து அவரை சத்தம் போட்டுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த வேல்முருகன் அவதூறாக பேசி காவேரியை பணி செய்யவிடாமல் தடுத்து, கொலை மிரட்டலும் விடுத்துள்ளார். இதுகுறித்து காவேரி அளித்த புகாரின் பேரில் சீவலப்பேரி எஸ்ஐ சிவகுமார் வழக்கு பதிந்து வேல்முருகனை கைது செய்து விசாரித்து வருகிறார்.