கள்ளக்குறிச்சி, ஜன. 23: கள்ளக்குறிச்சி மாவட்டம் உளுந்தூர்பேட்டை கேசவன் நகரை சேர்ந்த பெரியசாமி மகன் செந்தில் (எ) பெரிசெந்தில். அகில பாரத இந்து மகா சபா மாநில பொதுசெயலாளர். இவரது வீட்டின் முன்பு கடந்த 23.12.2023 அன்று பெட்ரோல் குண்டு போடப்பட்டது. இதுதொடர்பாக உளுந்தூர்பேட்டை காவல்நிலையத்தில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர். அதில் செந்தில் (எ) பெரி செந்தில்(46), இவரது மகன் சந்துரு(24) (அகில பாரத இந்து மகா சபா மாவட்ட இளைஞரணி செயலாளர்) ஆகிய இருவரும் சென்னையை சேர்ந்த நபர் மூலமாக தனது வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சு சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து இருவரும் உளுந்தூர்பேட்டை காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர். இந்நிலையில் இந்த குற்றவாளிகள் மேலும் இதேபோன்ற குற்றங்களில் மீண்டும் ஈடுபடக்கூடும் என்பதால் இவர்களின் நடவடிக்கையை கட்டுபடுத்தும் பொருட்டு கள்ளக்குறிச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் சமய்சிங் மீனா பரிந்துரையின்பேரில் கள்ளக்குறிச்சி ஆட்சியர் ஷ்ரவன்குமார் ஓராண்டு குண்டுர் தடுப்பு சட்டத்தில் சிறையில் அடைக்க உத்தரவிட்டார். அதன்படி செந்தில் மற்றும் சந்துரு ஆகிய இருவரையும் உளுந்தூர்பேட்டை போலீசார் கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர்.