பெரம்பூர்: புளியந்தோப்பு பகுதிகளில் இரவு நேரங்களில் அடிக்கடி ஏற்படும் மின்தடையை கண்டித்து, பொதுமக்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். புளியந்தோப்பு போகி பாளையம் மற்றும் கார்ப்பரேஷன் லைன் உள்ளிட்ட பகுதிகளில் கடந்த சில நாட்களாக அடிக்கடி இரவு நேரங்களில் மின்சாரம் துண்டிக்கப்படுவதால், அப்பகுதி மக்கள் புழுக்கத்தில், தூங்க முடியாமல் கடும் சிரத்திற்குள்ளாகி வருகின்றனர். இதுகுறித்து பலமுறை மினவாரி அலுவலகத்தில் புகார் அளித்தும், நடவடிக்கை எடுக்கவில்லை எனவும், இரவு நேரத்தில் மின்சாரம் துண்டிக்கப்படும்போது, மின்வாரிய தொலைபேசி எண்ணை தொடர்பு கொண்டால், அழைப்புகளை எடுப்பதில்லை எனவும் அப்பகுதி மக்கள் குற்றம்சாட்டுகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு 12 மணியளவில் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இதனால், ஆத்திரமடைந்த அப்பகுதியை சேர்ந்த சுமார் 50க்கும் மேற்பட்ட மக்கள், புளியந்தோப்பு போகி பாளையம் சந்திப்பில், மின்வாரிய அதிகாரிகளை கண்டித்து, சாலை மறியலில் ஈடுபட்டனர். தகவலறிந்து சம்பவ இடத்திற்கு வந்த புளியந்தோப்பு போலீசார், போராட்டத்தில் ஈடுபட்ட மக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, இதுகுறித்து சம்மந்தப்பட்ட அதிகாரிகளிடம் தெரிவித்து, உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தனர். இதனையடுத்து, அப்பகுதி மக்கள் அனைவரும் கலைந்து சென்றனர்.