பெரம்பூர்: சென்னை புளியந்தோப்பு காவல் நிலையத்தில் இரண்டு ரோந்து வாகனங்கள் உள்ளது. இந்த வாகனங்கள் மூலம் தினமும் சுழற்சி முறையில் புளியந்தோப்பு காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டுவந்தனர். இந்த நிலையில், கடந்த 3 மாதங்களாக ஒரு ரோந்து வாகனம் பழுதாகிவிட்டதால் ரோந்து செல்ல முடியாமல் போலீசார் தவிக்கின்றனர். மேலும் அந்த வாகனத்தை பழுது நீக்கம் செய்ய நடவடிக்கை எடுக்காமல் காவல்நிலையத்தின் ஒரு பகுதியில் நிறுத்திவைத்துள்ளனர். தற்போது அந்த வாகனம் சேதம் அடைந்து வருகிறது. மேலும் ஒரு வாகனம் மட்டுமே உள்ளதால் புளியந்தோப்பு பகுதியில் சரிவர ரோந்து பணிகளை மேற்கொள்ள முடிவதில்லை. இதனால் குற்றச் செயல்கள் அதிகரித்து வருகிறது.புளியந்தோப்பு காவல் நிலையத்தில் 90 பேர் பணியில் இருக்கவேண்டும். ஆனால் தற்போது 42 பேர் மட்டுமே பணியில் உள்ளனர். இதில் 10 பேர் பெண் காவலர்கள். இதனால் கூடுதல் பணிகளை மேற்கொள்வதால் அனைத்து காவலர்களும் பணி சுமைக்கு ஆளாக்கப்பட்டுள்ளனர். எனவே, ரோந்து வாகனத்தை பழுதுநீக்கி தருவதுடன் கூடுதல் காவலர்கள் நியமிக்க நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று போலீசார் வேண்டுகோள் விடுத்துள்ளனர். சமூகநல ஆர்வலர்களும் இந்த கருத்தை வலியுறுத்துகின்றனர்….