பெரம்பூர்: புளியந்தோப்பு அம்பேத்கர் கல்லூரி சாலையில் 1975ம் ஆண்டு குடிசை மாற்று வாரியத்தால் ஏழை எளியோருக்கு வீடுகள் கட்டித் தரப்பட்டன. 47 ஆண்டுகள் கடந்துவிட்ட நிலையில் அந்த வீடுகள் பழமையடைந்து பொதுமக்கள் அங்கு வாழ தகுதி இல்லாத சூழ்நிலை ஏற்பட்டது. எனவே, இந்த குடியிருப்புகளை இடித்து விட்டு அதே இடத்தில் மீண்டும் குடிசை மாற்று வாரியத்தால் வீடுகள் கட்டி தரப்பட்டன. இதில் ஏ-பிளாக் மற்றும் பிற பிளாக்கில் உள்ள 80 வீடுகள் மீண்டும் அதே இடத்தில் கட்ட முடியாத நிலை ஏற்பட்டது. சாலை விரிவாக்கத்திற்காக அந்த இடம் தேவைப்பட்டதால், பழமை வாய்ந்த அந்த கட்டிடத்தில் இருந்த 80 வீடுகளில் இருந்த பயனாளிகளுக்கு புளியந்தோப்பு கே.பி. பார்க் பகுதியில் புதிதாக வீடுகள் ஒதுக்கப்பட்டன.கடந்த 6 மாதத்திற்கு முன், பழமை வாய்ந்த கட்டிடத்தில் இருந்த பொதுமக்கள் கொஞ்சம் கொஞ்சமாக புளியந்தோப்பு தமிழ்நாடு நகர்ப்புற வாழ்விட மேம்பாட்டு வாரியத்தால் கட்டப்பட்ட அடுக்குமாடி குடியிருப்புகளுக்கு செல்ல ஆரம்பித்தனர். அனைவரும் சென்றுவிட்ட நிலையில் மிகவும் பழமை வாய்ந்த பழைய கட்டிடம், அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டிகளுக்கு அச்சுறுத்தலாக இருந்தது. எனவே, இதனை இடிக்கும் பணிகளை நகர்புற வாழ்விட மேம்பாட்டு வாரியம் தொடங்கி உள்ளது. பகுதி நிர்வாக பொறியாளர் சுடலை முத்துமாணிக்கம், உதவி நிர்வாக பொறியாளர் தயாளன், உதவி பொறியாளர் முத்தழகி ஆகியோர் மேற்பார்வையில் அந்த பழுதடைந்த அடுக்குமாடி குடியிருப்புகள் இடிக்கப்பட்டு வருகின்றன.பொக்லைன் மற்றும் அதிநவீன இயந்திரங்கள் பயன்படுத்தி இந்த குடியிருப்புகளை இடிக்கும் பணி நடைபெற்று வருகிறது. விரைவில் இந்த பணி முடிவடையும் எனவும், அதுவரை டவுட்டன் பகுதியில் இருந்து வரும் கனரக வாகனங்கள் பட்டாளம் மற்றும் புளியந்தோப்பு நெடுஞ்சாலை வழியாக திருப்பி விடப்பட்டுள்ளதாகவும், மறுமுனை வியாசர்பாடியில் இருந்து வரும் வாகனங்கள் ஜீவா மேம்பாலத்தில் கீழ்பகுதியில் திருப்பி விடப்பட்டுள்ளதாகவும் அதிகாரிகள் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது….