புளியங்குடி,ஜூன் 13: புளியங்குடியில் மது விற்ற மூதாட்டி உட்பட இருவரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்களை பறிமுதல் செய்தனர். புளியங்குடி இன்ஸ்பெக்டர் பாலகிருஷ்ணன் உத்தரவின்பேரில் எஸ்ஐ பரமசிவம் மற்றும் போலீசார் நேற்று முன்தினம் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது புளியங்குடி பஸ் நிலையம் அருகில் உள்ள பெட்டிக்கடையில் மதுபாட்டில் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் பெட்டிக்கடையில் போலீசார் திடீரென சோதனை நடத்தினர். அப்போது அங்கு சட்ட விரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்வது தெரியவந்தது. இதையடுத்து கடை உரிமையாளர் புளியங்குடி நடுத்தெருவை சேர்ந்த முப்பிலி மாடத்தி (60), அவருக்கு உதவியாக இருந்த புளியங்குடி நடு கருப்பழகு தெரு மாடசாமி மகன் தங்கச்சாமி (26) ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 50 மதுபாட்டில்கள், ஒரு பைக்கை போலீசார் பறிமுதல் செய்தனர்.