புளியங்குடி, செப். 30: புளியங்குடியில் அரசு நூலகரின் சைக்கிளை மதுபோதையில் திருடி சென்ற ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர். புளியங்குடி- டி.என்.புதுக்குடியை சேர்ந்தவர் முத்துமாணிக்கம்(56). புளியங்குடி அரசு நூலகராக உள்ளார். நேற்று முன்தினம் (வியாழன்) மிலாதுநபி அரசு விடுமுறை என்பதால் முத்துமாணிக்கம், தினசரி நாளிதழ்களை சேகரித்து வைப்பதற்காக நூலகத்திற்கு சைக்கிளில் சென்றார். அப்போது நூலகம் முன் சைக்கிளை நிறுத்திவிட்டு உள்ளே சென்றார். பின்னர் திரும்பி வந்து பார்த்தபோது சைக்கிளை காணவில்லை. இதுகுறித்த புகாரின்பேரில் புளியங்குடி போலீசார் வழக்கு பதிவு செய்தனர். சம்பவ பகுதியில் உள்ள சிசிடிவி காட்சிகளை ஆய்வு செய்தபோது, ஆசாமி ஒருவர் நூலகம் முன் நிறுத்தி வைத்திருந்த சைக்கிளை மதுபோதையில் தள்ளாடியபடி தள்ளிச்செல்லும் காட்சி பதிவாகியிருந்தது. இந்த போதை ஆசாமியை போலீசார் தேடி வருகின்றனர்.