Monday, June 17, 2024
Home » புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் நெற்றியில் மிளிரும் நாமம்; செய்யாறு ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டிகள்: திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கும் அனுப்புகின்றனர்

புரட்டாசி மாதத்தின் சனிக்கிழமைகளில் நெற்றியில் மிளிரும் நாமம்; செய்யாறு ஜடேரி கிராமத்தில் தயாராகும் நாமக்கட்டிகள்: திருப்பதி, காஞ்சிபுரம், ஸ்ரீரங்கம் கோயில்களுக்கும் அனுப்புகின்றனர்

by kannappan

செய்யாறு: புரட்டாசி மாதம் பிறந்தாலே ஒவ்வொரு சனிக்கிழமையும் வீடுகளில் பக்தி பரவசமாக ஒலிக்கும் முதல் குரல் கோவிந்தா, கோபாலா, நாராயணா என்ற நாமம் தான். அன்றைய தினம் குழந்தைகள் முதல் பெரியவர்கள் வரையில் நெற்றியில் பளிச்சிடும் நாமம் தரித்து, கையில் சொம்புடன், இடுப்பில் வெள்ளை வேட்டி, அதைச்சுற்றி இருக்கிக் கட்டப்பட்ட மஞ்சள் துண்டு கட்டிக்கொண்டு வீட்டுக் கதவைத் தட்டாத பக்தர்கள் யாரும் இருக்க முடியாது. புரட்டாசி மாதம் என்றாலே வீடுகளில் சனிக்கிழமைகளில் பெருமாளை கும்பிடுவது தான் ஞாபகத்திற்கு வரும். அப்போதே எந்த சனிக்கிழமையை கும்பிடுவது என்றும், உறவினர்களில் யார் யாரை கூப்பிடுவது என்று நிர்ணயித்த விழாவாக கொண்டாடுவார்கள். பெருமாள் கோயில்கள், பஜனை கோயில்களில் அன்றைய தினம் உறியடி போன்ற விழாக்களும் நடத்துவார்கள். நெற்றி முழுக்க நாமத்தை அணிந்து இருப்பர். புரட்டாசி என்றாலே முதலில் ஞாபகத்திற்கு வருவது நாம் நெற்றியில் அணியும் திருநாமம்தான். விஷ்ணு, பெருமாள், திருப்பதி வெங்கடாசலபதி, கோவிந்தன், கிருஷ்ணண், ராமர் போன்ற வைஷ்ணவக் கடவுளை வணங்கும்போது நாமம் போட்டு இருப்பதை பழமையான புராணங்களில் இருந்து  நாம் தெரிந்து கொள்ளலாம். அந்தக் காலத்தில் இருந்தே சிறப்பிடம் பெற்றிருக்கிறது நாமக்கட்டி. அந்த நாமக்கட்டி தயாரிப்பில் புகழ் பெற்று விளங்குவது செய்யாறு அருகே உள்ள ஜடேரி கிராமம் என்பது நம்மில் பலருக்கு தெரியாது. அப்படிப்பட்ட நாமம் எங்கிருந்து வருகின்றது அதன் பின்னணி தெரிய வாய்ப்பில்லை, அப்படிப்பட்ட நாமத்தை நம்பி ஒரு கிராமமே உள்ளது என்றால் வியப்பாகவே உள்ளது. நாமக்கட்டி என்றாலே நமக்கு நினைவிற்கு வருவது ஜடேரி கிராமம்தான். நாமக்கட்டிகளை உற்பத்தி செய்யும் இக்கிராமம் திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறுக்கு அருகில் 7 கி.மீட்டரில் தொலைவில் சுமங்கலி செல்லும் சாலையில் அமைந்துள்ளது. இக்கிராமத்தில் வாழும் 150 குடும்பங்களில் 100 குடும்பத்தினர் நாமக்கட்டி செய்யும் தொழிலில் ஈடுபட்டுள்ளனர். நாமக்கட்டி தயாரிப்பதற்காகவே இயற்கையே இந்த கிராமத்தைத் தேர்ந்தெடுத்துள்ளது ஒரு அதிசயமாகும். ஆம், நாமக்கட்டி தயாரிப்புக்கு, முதல் ஆதாரமாக இருப்பவை வெள்ளை பாறைகள். இவை ஜடேரிக் கிராமத்தின் தாய் ஊரான தென்பூண்டிப்பட்டு கிராமத்தில் உள்ளன. இப்பகுதியில் ஆறரை அடி ஆழத்திற்கு தோண்டிச் சென்றால் வெள்ளை நிறத்திலான பாறைகள் நிறைய உள்ளன. வெள்ளை நிறப் பாறைகள் சுமார் 15 அடி ஆழம் வரையில் காணப்படுகிறது. இந்த வெள்ளை நிறப் பாறைகளில் இருந்து நாமக்கட்டிகளை கிராம மக்கள் தயாரித்து வருகின்றனர். வெள்ளை நிறத்தில் காணப்படும் பாறைகளை வெட்டி எடுத்து, மாட்டு வண்டிகள் மூலம் ஜடேரி கிராமத்திற்கு எடுத்து வந்து பாறைகளை சிறு, சிறு கட்டிகளாக உடைத்து  பின் அவற்றை அரைவை இயந்திரங்களில் மாடுகளைப் பூட்டி வைத்து ஓட்டி நைசாக அரைக்கிறார்கள். இப்படி பாறைகளாக உள்ள வெள்ளை கற்களை நைசாக அரைத்து பின்னர் தண்ணீரில் சில மணி நேரம் ஊற வைக்கின்றனர். அப்போது அந்த மண்ணின் மிருதுவான வண்டல் மண் மேலடுக்கு வந்து விடும். அதன் பின்னர் பள்ளத்தில் தேங்கி இருக்கும் தண்ணீரை வெளியேற்றி விட்டு அடியில் படிந்துள்ள மிருதுவான வெள்ளை  மண்ணை எடுத்து ஈரப்பதத்துடன் பெரிய, பெரிய மண் உருண்டைகளாக போட்டு வைக்கின்றனர். மண் உருண்டைகள் மிக லேசான ஈரப்பதத்தில் இருக்கும் போது சிறு, சிறு உருண்டைகளாக தட்டி நாமக்கட்டிகளாக உருட்டி வெயிலில் காய வைக்கின்றனர். பிறகு நாமக் கட்டிகள் நன்கு காய்ந்த பிறகு வைக்கோல் போட்டு மூட்டை மூட்டைகளாக கட்டி விற்பனைக்கு வைக்கின்றனர். இந்த நாமக்கட்டி செய்யும் மண்ணுடன் சிறிது சாம்பல், வாசனை திரவியம் சேர்ந்து விபூதியாகவும் இங்கு தயாரிக்கின்றனர். இவ்வாறு இங்கு தயாரிக்கப்படும் நாமக்கட்டி திருப்பதி, காஞ்சிபுரம், ரங்கம் போன்ற கோயில் ஸ்தலங்களிலும் சென்னை, பெங்களூரு போன்ற பெருநகரங்களிலும் ஜடேரி நாமக்கட்டித்தான் மிகவும் பிரசித்தம் பெற்றதாகும். நெற்றியில் பூசுவதற்கு மட்டுமில்லாமல், நாமகட்டி நாட்டு மருந்து தயாரிப்பிற்கும் பயன்படுவதால் ஜடேரி நாமக்கட்டிகளை நாட்டு மருந்து வியாபாரிகளும் மொத்தமாக வாங்கிச் செல்கின்றனர். ஜடேரி கிராமத்தில் உள்ளவர்கள் நான்கு, ஐந்து தலைமுறைக்கு மேலாக பரம்பரைத் தொழிலாக நாமகட்டிகளை செய்து வருகின்றனர். பக்தர்களுக்கு நாமம் தரிக்க உதவுகிறது நாமக்கட்டி. அந்த நாமக்கட்டி செய்யும் தொழில் தான் ஜடேரிக் கிராமத்தினருக்கு சோறு போடும் தொழிலாகவே இருந்து வருகிறது. ஜடேரிக் கிராம மக்கள் விவசாயம் இல்லாத காலங்களில் நாமக்கட்டி  தயாரிப்பில் ஈடுபட்டு வருகின்றனர். …

You may also like

Leave a Comment

two × 1 =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi