சென்னை: மாண்டஸ் புயலால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் மின்சாரத்துறை தரப்பில் துரித நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு சீரான மின் விநியோகம் வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் செந்தில் பாலாஜி தெரிவித்துள்ளார். தமிழ்நாடு மின்சார வாரிய தலைமை அலுவலகத்தில் செயல்பட்டுவரும் மாநில மின் பகிர்ந்தளிப்பு மையத்தில் மின்சாரத்துறை அமைச்சர் செந்தில் பாலாஜி நேற்று ஆய்வு மேற்கொண்டார். இந்த ஆய்வின்போது மின்துறை அதிகாரிககள் உடனிருந்தனர். இதன் பின்னர், நிருபர்களிடம் அமைச்சர் செந்தில்பாலாஜி கூறியிருந்ததாவது: சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் உள்ள 355 துணைமின் நிலையங்களில், 10 துணை மின் நிலையங்களில் மட்டுமே மின்சாரம் நிறுத்திவைக்கப்பட்டன. அதில் 622 பீடர்களில் கன மழை மற்றும் வேகமான காற்று வீசியதின் காரணமாக மின் விநியோகம் நிறுத்திவைக்கப்பட்டது. சென்னையில் சில இடங்களில் மின் விநியோகம் நிறுத்தி வைக்கப்பட்டது. மாண்டஸ் புயல் காரணமாக மின்துறை தரப்பில் சென்னையில் 1,100 பணியாளர்களும், ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 11,000 பணியாளர்களும் களத்திலே பணியாற்றினர். சென்னையைப் பொறுத்த வரையில் ஒரே ஒரு இடத்தில் மட்டும் (ஆர்.எம்.யூ) வளைய சுற்றுத்தர அமைப்பின் மீது மரம் விழுந்து பாதிப்பு ஏற்பட்டது. புறநகர் பகுதிகளில் சேதமடைந்த மின் கம்பங்கள் களத்திலே சென்று ஆய்வு செய்யும் பணியில் மின்வாரிய அதிகாரிகள் துரிதமாக ஈடுபட்டனர். மின்னகத்தில் நேற்று முன் தினம் வரை 13,10,000 அழைப்புகள் பதிவாகி உள்ளது. அதற்கு தீர்வு காணும் வகையில் மின்சாரத்துறையினர்துரிதமாக செயல்பட்டனர் என்றார்….